ஹரியானா சட்டமன்ற தேர்தல்.. அனல் பறக்கும் பிரசாரம்! ராகுல் காந்தி இறுதிக்கட்ட பரப்புரை
சண்டிகர்: ஹரியானாவில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று இறுதிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை எதிர்த்து தீவிரமாக பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக். 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. இருப்பினும் இந்த தேர்தல் பாஜகவுக்கு சவாலானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தல் முடிவுகளும் கூட, இதையே பிரதிபலித்தன. அதாவது மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 5ஐ காங்கிரஸ் கைப்பற்றியது.

சட்டமன்ற தேர்தல் போட்டியை பொறுத்த வரை, பாஜக தனியாகவும், காங்கிரசும்-சிபிஎம் கட்சியும் ஒரு கூட்டணியாகவும், ஜனநாயக ஜனதா கட்சியும்-ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) ஒரு கூட்டணியாகவும், இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கட்சி ஒரு கூட்டணியாகவும் களம் காண்கிறது. தவிர ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தனித்தனியாக களம் காண்கின்றன.
பாஜகவின் முதல்வர் முகமாக, தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனியும், காங்கிரஸின் முதல்வர் முகமாக பூபேந்தர் சிங் ஹுடாவும் களமிறங்கியுள்ளனர். ஹரியானாவை பொறுத்தவரை பிரச்னைகளுக்கு பஞ்சம் இல்லாத மாநிலங்களாக இருக்கிறது.
குறிப்பாக விவசாயிகளின் பிரச்னை, வேலையின்மை, அக்னிவீரர் திட்டம், பணவீக்கம், மல்யுத்த வீரர்களின் போராட்டம் என எல்லா துறைகளிலும் பஞ்சாயத்துகள் வெடித்து கிளம்பியுள்ளன.
இந்நிலையில் இன்று ராகுல் காந்தி ஹரியானாவில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். நுஹ் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர், வேலையின்மை பிரச்னை குறித்து மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது, "பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் அரசியலமைப்பு சட்டத்தை அழித்து வருகின்றன. அவர்கள் நாட்டை துண்டாட நினைக்கிறார்கள். வெறுப்பு பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். இந்த தேர்தல் வெறுப்புக்கும் அன்புக்கும் இடையே நடக்கும் சண்டை.
ஹரியானாவில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி எரிகிறது. இம்மாநிலத்தை சேர்ந்த சில இளைஞர்களை நான் அமெரிக்காவில் சந்தித்தேன். அவர்கள் ஹரியானாவில் வேலையில்லா பிரச்னை இருப்பதை சுட்டிக்காட்டினர். ரூ.50 லட்சம் கடன் பெற்று அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இங்கே பிரதமர் மோடி, குறிப்பிட்ட சில பணக்காரர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்திருக்கிறார். ஆனால், விவசாயிகளின் கடன்கள் அப்படியே இருக்கின்றன.
இந்த நிலையை மாற்ற காங்கிரஸுக்கு வாக்களித்து, பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுங்கள்" என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications