பிடிஆர் சொல்றத விடுங்க.. “இலவச திட்டம்” அறிவித்த அரியானா பாஜக அரசு! இயற்கை விவசாயத்துக்கு திட்டம்
சண்டிகர்: அரியானாவில் விவசாயிகள் நாட்டு மாடுகளை வாங்குவதற்கு ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்து உள்ளார்.
அரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் , நாட்டு மாடுகள் இனத்தை காக்கும் வகையிலும் முக்கிய திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.
அதாவது, இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நாட்டு மாடுகள் வாங்குவதற்காக தலா ரூ.25,000 வழங்கப்படும் என்று அவர் அறிவித்து இருக்கிறார். "கிட்டத்தட்ட 2,800 விவசாயிகள் நாட்டுப் பசு வாங்கும் திட்டத்துக்காக முன்பதிவு செய்து இருக்கின்றனர்." என்றார்.

கிஷான் கிரெடிட் கார்டு
பசு கிஷான் கிரெடிட் கார்ட் என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ள அரியானா அரசு இதுவரை அதில் 42,000 கிரெடிட் கார்டுகளை வழங்கி இருக்கிறது. "ரசாயண உரங்களால் விவசாய நிலங்கள் விஷமாகிவிட்டன. இயற்கை விவசாயமே இதற்கான ஒரே வழி. இந்த திட்டத்தின் நோக்கம் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும் என்பதுதான்.

பிரதமர் மோடி
கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் ஆபத்தானது என்றும், இலவச திட்டங்களை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில், இலவசங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் இதனை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பலரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் திமுகவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது.

தலைமை நீதிபதி
இந்த வழக்கை சில நாட்களுக்கு முன் விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது. மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவது அரசின் கடமை. இந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது தொடர்பான கேள்வியும் உள்ளது." என்றார்.

பிடிஆர் விளக்கம்
பிரதமர் மோடியின் கருத்துக்கு பதிலளித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "நீங்கள் பொருளாதாரத்தில் பி.எச்.டி முடித்துள்ளீர்களா? அல்லது நோபல் பரிசைதான் வைத்திருக்கிறீர்களா? எங்களை விட சிறந்தவர்கள் என்று சொல்ல உங்களிடம் ஏதாவது இருக்கா? தமிழ்நாட்டில் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்ததே பிரதமர் மோடிதானே.." என்று குறிப்பிட்டு விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications