பெற்றோர், தங்கை, பாட்டி என வீட்டிலுள்ள.. அனைவரையும் சுட்டு கொன்றுவிட்டு.. பார்ட்டிக்கு சென்ற மகன்
சண்டிகர்: தான் கேட்ட 5 லட்ச ரூபாயைத் தர மறுத்ததற்காக தாய், தந்தை, சகோதரி, பாட்டி என நால்வரை ஹரியானா இளைஞர் சுட்டுக் கொன்றுள்ளார். மேலும், கொலை செய்த பிறகு நட்சத்திர விடுதியில் பார்ட்டிக்கும் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் 45 வயதான ரியல் எஸ்டேட் அதிபர், அவரது தாய், மனைவி மற்றும் மகள் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டனர்.
அதில் சம்பவ இடத்திலேயே அந்தத் தொழிலதிபரும், அவரது தாயும், மனைவியும் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் அவரது 19 வயது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை
இருப்பினும், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் அங்குத் தடயங்களைச் சேர்த்து தங்கள் விசாரணையைத் தொடங்கினர். வணிகப் போட்டி காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகித்தனர். ஆனால் விசாரணையின் போது, ரியஸ் எஸ்டேட் அதிபரின் மகன் அபிஷேக் (20) தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் போலீசாரின் சந்தேகம் அவர் மீது வந்தது.

சொந்த மகன்.
இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது நால்வரையும் கொன்றதை அபிஷேக் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் எதற்காக இந்த கொலையில் ஈடுபட்டார் என்பது குறித்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் இதுவரை கண்டறியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் அதிகாரி
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெற்றோர், சகோதரி, பாட்டி ஆகியோர் கொன்றுவிட்டு, அபிஷேக் தனது நண்பர்களுடன் இங்குள்ள நட்சத்திர விடுதியில் பார்ட்டிக்கு சென்றுள்ளார். இருப்பினும் குடும்பத்தினரைக் கொன்ற குற்ற உணர்ச்சி இருந்ததால் பார்ட்டியில் தன்னால் ஜாலியாக இருக்க முடியவில்லை என்றும் அபிஷேக் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தான் செய்த குற்றத்திற்காக போலீசாரிடம் சரணடைய நினைத்ததாகவும் இருப்பினும் அச்சம் காரணமாகச் சரணடையவில்லை என்றும் அபிஷேக் கூறினார்" என்று தெரிவித்தார்.

தங்கை
பார்ட்டியில் இருந்து திரும்பிய பிறகு, வீடு உள்பக்கம் லாக் செய்திருப்பதாகவும் யாரும் கதவைத் திறக்கவில்லை என்றும் தனது மாமாவிடம் அபிஷேக் போன் செய்து கூறியுள்ளார். அதன் பின்னர் கதவை உடைத்துக் கொண்டு சென்று பார்த்தபோது அனைவரும் உயிரிழந்திருந்தனர். தங்கை மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், துப்பாக்கியால் சுட்ட அபிஷேக்கே அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளார்.

என்ன காரணம்
அபிஷேக் தனக்கு 5 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். எதற்கு அவ்வளவு பெரிய தொகை என அவரது குடும்பத்தினர் காரணம் கேட்டுள்ளனர். இருப்பினும், அபிஷேக் காரணத்தைக் கூற மறுத்தாக கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை அப்படியே பொரியாகவே, அபிஷேக் நால்வரையும் சுட்டுக் கொன்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications