'அரசு வேலையில் பாதுகாப்பு முக்கியம்'.. ஹரியானாவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா
சண்டிகர்: ஹரியானா மாநிலம் 2014-ஆண்டு பேட்ஜ் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி நேற்று திடீரென ராஜினாமா செய்தார். அரசு வேலையில் இருந்தாலும் தனிப்பட்ட பாதுகாப்பு முக்கியம் என்பதால் ராஜினாமா செய்ததாக கூறினார்.
இவரது ராஜினாமாவை எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் இது பற்றி கேட்டபோது இது "அவரது தோல்வியை காட்டுகிறது" என்று தெரிவித்தார்.
ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஐஏஎஸ் அதிகாரி ராணி நகர் (35) கடைசியாக ஹரியானா மாநில ஆவண காப்பகத் துறை இயக்குநராகப் பொறுப்பேற்று இருந்தார். அத்துடன் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கூடுதல் இயக்குனராகவும் இருந்தார்.

பேஸ்புக்கில் கருத்து
அண்மையில், ஐஏஎஸ் அதிகாரி ராணி, தனது பேஸ்புக் பக்கத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு நீக்கப்பட்டதை தொடர்ந்து ராஜினாமா செய்வதாக பதிவிட்டிருந்தார்.
அவர் தனது ராஜினாமாவை மாநில தலைமை செயலாளர் கெஷ்னி ஆனந்த் அரோராவுக்கு அனுப்பினார், அதை மத்திய அரசுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். ஐஏஎஸ் அதிகாரி ராணி, என்ன காரணத்திற்காக ராஜினாமா செய்கிறேன் என்பதை ராஜினாமா கடிதத்தில் விரிவாகக் கூறவில்லை. வெளிப்படையாகவும் இதுவரை தெரிவிக்கவில்லை.
ராஜினாமா நகல்களை ஜனாதிபதி, பிரதமர், ஹரியானா கவர்னர் மற்றும் முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் ராணி அனுப்பியுள்ளார்.

தனிப்பட்ட பாதுகாப்பு முக்கியம்
"இந்த ராஜினாமாவை சமர்ப்பிக்க காரணம் "அரசின் கடமையில் தனிநபர் பாதுகாப்பு முக்கியம்" என்று ஐஏஎஸ் அதிகாரி ராணி தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது கடிதத்தில் இந்திய ஆட்சி பணி சேவை பதவியை உடனே ராஜினாமா செய்கிறேன். மே 4 ம் தேதி பிற்பகல் முதல் நடைமுறைக்கு வருவதாகவும் கூறியிருந்தார். அந்தக் கடிதமும் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்து. ராஜினாமா செய்த பின்னர் அவர் தனது சகோதரியுடன் சண்டிகரில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திற்கு புறப்பட்டு சென்றார்.

பாதுகாப்பை காட்டி ராஜினாமா
இது குறித்து காங்கிரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில் ஐஏஎஸ் அதிகாரியின் ராஜினாமா அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். மாநிலத்தில் உள்ள பாஜக-ஜேஜேபி அரசை எதிர்த்து ஒரு மூத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், அவர் பாதுகாப்பற்றதாக உணர்கிறார். ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அரசு கடமையில் தனிப்பட்ட பாதுகாப்பை காரணம் காட்டி ராஜினாமா செய்தால், ஹரியானாவில் யார் பாதுகாப்பாக இருப்பார்கள். இது உங்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறதல்லவா. இது உங்கள் அரசின் தோல்விக்கு சான்று அம்மாநில முதல்வரை சுர்ஜேவாலா சாடியுள்ளார்.

துன்புறுத்தியதாக புகார்
2018 ஜூன் மாதம் ஒரு கூடுதல் தலைமைச் செயலாளர் மட்ட அதிகாரி தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினார் ஐஏஸ் அதிகாரி ராணி. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மாநில அரசு விசாரணை நடத்தியது, ஆனால் அந்த அதிகாரி மீது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாராம் இல்லை என்று மூத்த அரசு அதிகாரி நேற்று தெரிவித்தார். இதையடுத்தே ராஜினாமா செய்ததாக கூறப்படகீறது. முன்னதாக தனது பேஸ்புக் பக்கத்தில் முந்தைய பதிவில் குறிப்பிட்ட மூத்த அதிகாரிக்கு எதிராக ஏராளமான புகார்கள் வந்தாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் புகாருட்ம அளித்திருந்தார். தனக்கும் தன்னுடைய சகோதரியின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் குற்றம்சாட்டிஇருந்தார்.












Click it and Unblock the Notifications