வெற்றி.. போர்வெல்லில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு! 104 மணிநேரத்துக்கு பிறகு மீட்டது எப்படி?
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் வீட்டின் பின்புறம் இருந்த 80 அடி ஆழம் கொண்ட போர்வெல்லில் (ஆழ்துளை கிணறு) விழுந்த 11 வயது சிறுவன் 60 அடி ஆழத்தில் உயிருக்கு போராடினார். இந்நிலையில் 104 மணிநேரத்துக்கு பிறகு வெற்றிகரமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.தற்போது சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
சத்தீஸ்கார் மாநிலம் ஜான்ஜீர் சம்பா மாவட்டம் மால்காரோடா அருகே உள்ள பிக்ரிட் கிராமத்தை சேர்ந்தவர் லாலா ராம் சாகு. இவரது மகன் ராகுல் சாகு (வயது 11).
இந்நிலையில் லாலாராம் சாகு தனது வீட்டின் பின்பு 80 அடிக்கு போர்வெல் (ஆழ்துளை கிணறு) அமைத்து இருந்தார். இதனை பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொண்டார்.

போர்வெல்லில் விழுந்த சிறுவன்
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் நீர் வற்றியது. இதனால் போர்வெல் பயன்பாடு இன்றி இருந்தது. இது மூடப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஜூன் 10ம் தேதி மதியம் போர்வெல் அருகே லாலாராம் சாகுவின் மகன் ராகுல்சாகு சென்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக போர்வெல்லுக்குள் தவறி விழுந்தார்.

மீட்பு பணி துவக்கம்
இதையடுத்து அவர் அழுதார். இந்த சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் வந்து கயிறு, துணியை பயன்படுத்தி மீட்க முயன்றனர். அவர்களால் முடியவில்லை. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மீட்பு பணி துவங்கப்பட்டது. போர்வெல்லின் பக்கவாட்டில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டும் பணி துவங்கியது.

குழாய் மூலம் ஆக்சிஜன்
மேலும் சிறுவனின் சுவாசத்துக்கு தேவையான ஆக்சிஜன் குழாய் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாநில, தேசிய பேரிடர் படையினர், ராணுவம், போர்வெல் மீட்பு சிறப்பு வல்லுனர்கள் ஆகியோர் மீட்பு பணியில் இணைந்தனர். இவர்கள் கம்ப்யூட்டர், கேமரா உதவியுடன் சிறுவனின் அசைவுகளை மேல் இருந்து கண்காணித்து வந்தனர்.

பத்திரமாக மீட்பு
இந்நிலையில் சிறுவன் 60 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று இரவில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனை பத்திரமாக மீட்டதை பார்த்து அவனது பெற்றோர், குடும்பத்தினர், பொதுமக்கள் ஆனந்த கண்ணீரில் மூழ்கினர்.

104 மணிநேர மீட்பு பணி
இந்த மீட்பு பணியானது 104 மணிநேரம் நடந்துள்ளது. மொத்தம் 500 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அடங்குவர். மேலும் போர்வெல்லில் விழுந்த ஒருவரை பத்திரமாக மீட்டதில் அதிக நேரம் நடந்த மீட்பு பணியாக இது மாறியுள்ளது. இதற்கு முன்பு 2006ல் ஹரியானாவில் உள்ள குருக்சேத்ராவில் 50 மணிநேர போராட்டத்துக்கு பிறகு சிறுவன் மீட்கப்பட்டதே மிக அதிக நேரம் நடந்த மீட்பு பணியாக பதிவாகி இருந்தது.

பாராட்டு
இந்த மீட்பு பணியில் நேரடியாக சத்தீஸ்கார் முதல்வர் பூபேஷ் பாகேல் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சிறுவன் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதால் அவர் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டி, நன்றி தெரிவித்துள்ளார்.

போர்வெல்லில் விழுந்த சிறுவன் மீட்பு
சத்தீஸ்கரில் ஜூன் 10ல் போர்வெல்லில் தவறி விழுந்த 11 வயது சிறுவன் ராகுல் சாகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். 104 மணிநேர போராட்டத்துக்கு பிறகு 500 பேர் சேர்ந்து சிறுவனை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் மீட்பு படையினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications