‛பாஜகவுக்கு அதிர்ச்சி’.. பஞ்சாப்பில் அதிக இடங்களை அள்ளும் ‛இந்தியா’ கூட்டணி - India Today சர்வே முடிவு
சண்டிகர்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப்பில் பாஜக கூட்டணியை விட ‛இந்தியா' கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என இந்தியா டூடே சார்பில் நடத்தப்பட்ட ‛மூட் ஆப் தி நேஷன் 2024' சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

அதேவேளையில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியாக இணைந்துள்ளன. இந்த கூட்டணிக்கு ‛இந்தியா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி வெளியேறி பாஜகவுடன் சேர்ந்துள்ளது.
அதேபோல் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதேபோல் தான் பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி கட்சியின் முதல்வரான பகவந்த் மானும் கட்சி ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் பஞ்சாப்பில் காங்கிரஸ் ின்றி தனித்தே களம் காண உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தையொட்டி மக்களின் மனநிலை என்ன? என்பது பற்றி Mood Of the Nation 2024 என்ற பெயரில் இந்தியா டூடே சார்பில் நாடு முழுவதும் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 2024 ஜனவரி மாதம் 28 ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பஞ்சாப் மாநிலத்தை ‛இந்தியா' கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்தாலும் கூட 2019 தேர்தலை போலவே அந்த கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பஞ்சாப்பில் மொத்தம் 13 நாடாளுமன்ற தொகுதிகளில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சிகள் தலா 5 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், பாஜக 2 தொகுதிகளிலும், எஸ்ஏடி கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாஜக கடந்த 2019 தேர்தலை போலவே 2 தொகுதிகளில் மீண்டும் வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக கடந்த முறை 8 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் 3 தொகுதிகளை இழக்கலாம் எனவும், ஆம்ஆத்மி கட்சி கடந்த முறை ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் கூடுதலாக 4 தொகுதிகளை கைப்பற்றலாம் எனவும் எஸ்ஏடி கட்சி கடந்த தேர்தலில் 2 இடங்களில் வாகை சூடிய நிலையில் இப்போது அதில் ஒன்றை இழக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்கு சதவீதத்தை பொறுத்தமட்டில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி கடந்த முறை 7 சதவீத ஓட்டுகளை பெற்றது. இந்த முறை அந்த கட்சியின் ஓட்டு சதவீதம் என்பது 27 சதவீதமாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை 40 சதவீத ஓட்டுகளை பெற்ற நிலையில் இந்த முறை 2 சதவீதத்தை இழந்து 38 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த முறை 10 சதவீத ஓட்டுகளை அறுவடை செய்த பாஜக இந்த முறை 17 சதவீத ஓட்டுகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த தேர்தலில் 28 சதவீத ஓட்டுகளை பெற்ற எஸ்ஏடி கட்சி இந்த முறை 14 சதவீத ஓட்டுகளை இழந்து வெறும் 14 சதவீத ஓட்டை மட்டுமே பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் கடந்த முறை 15 சதவீதம் பெற்ற நிலையில் இப்போது 4 சதவீத ஓட்டுகளை பெறலாம் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications