போலி பத்திரம்.. 20 கோடி நில மோசடி.. மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் வீட்டில் சிபிசிஐடி சோதனை
சென்னை: நிலமோசடி வழக்கில் சிக்கியுள்ள அதிமுகவைச் சேர்ந்த மன்னர்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதிமுக ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கு எதிரான நில மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி மூன்று மாதத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "எனது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்தும், எனக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்தும் ரூ.20 கோடி மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் செய்துள்ளனர்,

இந்த மோசடியில் அதிமுகவைச் சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதா, அதிமுகவைச் சேர்ந்த மன்னர்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் தான் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2017-ம் ஆண்டு மாவட்டக் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரால் வழக்குப் பதிவு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி. சந்திரசேகரன், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி மூன்று மாதத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நிலமோசடி வழக்கில் சிக்கியுள்ள மனோகரன் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அதிகாலையிலேயே சிபிசிஐடி அதிகாரிகள் அதிமுக பிரமுகர் வீட்டில் சோதனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications