சாதித்த எடப்பாடியார்.. நெல்லையில் ஒன்று, ஒசூரில் ஒன்று.. தமிழகம் வரும் 14 புதிய நிறுவனங்கள்!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை 14 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கனோருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்த்து தமிழகத்தில் தொழில் தொடங்க வைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பு குழுக்களை அமைத்து உள்ளார். இந்த குழுவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளார்கள்.
இந்த குழுவினர் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்து வருகிறார்கள். .தமிழகத்தில் தொழில் தொடங்கினால் அனைத்து வசதிகளும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும் என்று உத்ரவாதம் அளித்து அழைத்து வருகிறார்கள் இதன் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை தமிழகத்தில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ஜாதியைக் காட்டி ஊராட்சி தலைவரை தரையில் அமர வைப்பதா? கண்டிக்கத் தக்க கொடூர செயல்.. சதீஷ் கொதிப்பு
ஐந்து மாதங்களில் தொழில்
இதன் காரணமாக இந்தியாவிலேயே அதிகமான அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 5 மாதங்களில் மட்டும் 42 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 30 ஆயிரத்து 664 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 67 ஆயிரத்து 612 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
என்னென்ன நிறுவனங்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் மேலும் 14 தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நாளை 12 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறார். ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட், அப்பல்லோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி, ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனம், டி.பி.ஐ. கார்போன் நிறுவனம், மந்த்ரா டேட்டா சென்டர் உள்பட 14 தொழில் நிறுவனங்களுடன் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதல்வர் மேற்கொள்கிறார்
ஒசூரில் ஒன்று
இதில் பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் தொழிற்சாலை அமைக்கிறது. ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஓசூரிலும், அப்பல்லோ டயர்ஸ் ஒரகடத்திலும் அமைக்க உள்ளது. மற்ற நிறுவனங்கள் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைய உள்ளன. இந்த 14 நிறுவனங்களும் ரூ. 10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்க உள்ளதால் இதன் மூலம் 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தொழில் முதலீடு
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்த நிலையில் மேலும் 14 தொழில் நிறுவனங்களுடன் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. இதன் மூலம் இந்த ஆண்டு மட்டும் 56 நிறுவனங்கள் தமிழகத்துக்கு தொழில் தொடங்க வந்திருக்கின்றன. இதனிடையே கொரோனா ஊரடங்கு காலத்திலும், வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்த்த மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் இரண்டாமிடம் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 'பிராஜக்ட் டுடே' என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, மூன்று மாதங்களில், ஒவ்வொரு மாநிலமும் ஈர்த்துள்ள, வெளிநாடு முதலீடுகள் குறித்த விபரங்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலம், 114 திட்டப் பணிகளுக்கு, 35 ஆயிரத்து, 771 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம், 132 திட்டப் பணிகளுக்கு, 23 ஆயிரத்து, 332 கோடி ரூபாய், முதலீடுகளை ஈர்த்து, இரண்டாம் இடம் பெற்றுள்ளது. கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திர மாநிலங்கள், அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.