ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. அருண் ஐபிஎஸ் எடுத்த அதிரடி ஆக்ஷன்! 15 பேர் மீது மொத்தமாக பாய்ந்த குண்டாஸ்!
சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை செய்யப்பட்டு கைதான 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்ட நிலையில், தற்போது மேலும் 15 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் இருந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே கொலைத் திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததும். வழக்கறிஞரும் ரவுடியுமான சம்பவம் செந்தில் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து தலைமறைவாக இருக்கும் சம்போ செந்தில், சீசிங் ராஜா, மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல ரவுடிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஹரிஹரன், மலர்க்கொடி, சதீஷ்குமார், கோ ஹரிஹரன். அஞ்சலை. பிரதீப். முகிலன். விஜயகுமார். விக்னேஷ் என்கிற அப்பு. அஸ்வத்தாமன், பொற்கொடி, ராஜேஷ், செந்தில் குமார், கோபி ஆகிய 15 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து ஏற்கனவே சிறையில் இருக்கும் இவர்கள் குண்டர் தரப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரரான பொன்னை பாலு ,அருள், சந்தோஷ்,ராமு, திருமலை உள்ளிட்ட 10 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே கொலை வழக்கில் 10 பேருக்கு குண்டர் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொள்ளை முயற்சி, திருட்டு குற்றங்களை ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள், சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்கள், மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications