ஸ்டாலின் "நம்பர் 1".. ஆளுநர் ரவி பின்னால் "அந்த 3 பேர்".. 60 நாள் பிளான்! புட்டு புட்டு வைத்த புள்ளி
சென்னை: ஆளுநர் என் ரவியை பின்னால் இருந்து 3 சக்திகள் இயக்கிக்கொண்டு இருப்பதாக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும்.. முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையில் மோதல் அடுத்த லெவலை அடைந்து உள்ளது. தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன.
சட்டசபையில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார். இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
சரவணன் அளித்த பேட்டி பின்வருமாறு, ஆளுநர் மாளிகை வெளிப்படையாக பேச வேண்டும். ஒன்று வெளிப்படையாக அரசியல் பேசுகிறார்கள். வெளிப்படையாக அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பதில் அளிக்க வேண்டிய நேரங்களில் நாங்கள் ஆளுநர் மாளிகை. நாங்கள் இதற்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என்கிறார்கள். ஆளுநர் ரவி அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். மோசமாக நடந்து கொண்டு இருக்கிறார். இது ஆர்எஸ்எஸ் கொடுக்க கூடிய தைரியம். உள்துறை அமைச்சர் கொடுக்க கூடிய தைரியம். ஆளுநரை எதிர்க்க கூட முடியாமல் எடப்பாடி திணறுகிறார்.

எடப்பாடி பாவம்
எடப்பாடியை பார்த்தால் பாவமாக இருக்கிறது. பரிதாபமாக இருக்கிறது. அவர் அண்ணாவின் பெயரை தாங்கிய கட்சியை சுமந்து , அண்ணாவின் பெயருக்கு இழுக்கை ஏற்படுத்துகிறார். ஆளுநர் தானே சட்டசபையில் மரபை மீறினார். ஆளுநர் தானே தவறு செய்தார். அந்த மரபு மீறல் பற்றி எடப்பாடி பேசவில்லையே? ஆளுநர் செய்த வரலாற்று பிழையை சரி செய்ய வேண்டும். சட்டசபை மாண்பை காப்பாற்ற வேண்டும் என்றுதான் முதல்வர் அந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். சட்டசபையை காக்க வேண்டிய கடமை முதல்வருக்கு இருக்கிறது.

கையெழுத்து போட்டார்
ஆளுநர் ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்ட பிறகு அவர் எப்படி மாற்றி பேச முடியாது. அவர் பேசியதை ஏற்றுக்கொண்டால் நாங்கள் தமிழர்கள் கிடையாது, நாங்கள் திராவிடர்கள் கிடையாது, அது எங்களுக்கு பெரிய இழுக்காக முடியும். ஆளுநர் எதிர்ப்பை நாங்கள் இன்னும் வீரியப்படுத்த போகிறோம். 60 நாட்களில் எங்கள் அழுத்தத்தை தீவிரப்படுத்துவோம் என்று ஏற்கனவே எம்பி டிஆர் பாலு தெரிவித்துவிட்டார். ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்துவிட்டோம். தமிழ்நாடு மக்கள் ஆளுநர் மீது வைத்து இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது.

சிற்பிகள்
தமிழ்நாடு சிற்பகலின் பெயரை ஏற்க மறுத்துவிட்டார்.. பேச மறுத்துவிட்டார் என்றால் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஆளுநரை இப்படி தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது ஆர்எஸ்எஸ், பாஜக, உள்துறை அமைச்சகம் என்ற 3 பேர்தான். முதல்வர் ஸ்டாலின் இந்தியா முழுக்க செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். இந்தியாவில் முதல்வர்கள் பட்டியலில் ஸ்டாலின் முதல் இடத்தில் இருக்கிறார். நம்பர் 1 முதல்வராக இருக்கிறார். இதை எல்லாம் பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மோடி முதல்வராக இருந்த போது கூட அவரால் செய்ய முடியாததை ஸ்டாலின் செய்கிறார். இதை பாஜகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் பாஜக இப்படி எல்லாம் செய்கிறது, என்று திமுக சரவணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications