அடுத்த சூறாவளி.. "அவர்" போட்டோ ரெடியாமே.. எடப்பாடி பழனிசாமியின் அடுத்த வியூகம் தயார்.. பரபர
சென்னை: இடைத்தேர்தலில் மண்ணை கவ்வினாலும், அடுத்தடுத்த ராஜதந்திரத்தை கையில் எடுத்து வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. அந்தவகையில், ஒற்றை தலைமையை நோக்கி எடப்பாடி பழனிசாமி உருவெடுத்து வருவதால், அதுகுறித்து சில தகவல்கள் வெளியாகி, அதிமுகவையே பரபரக்க வைத்து வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது.. இத்தனைக்கும் ஓபிஎஸ்ஸும் அந்த தேர்தலில் இருந்து விலகி கொண்டார்.. தினகரனும் ஒதுங்கி கொண்டார்.. தமிழக பாஜகவும் ஆதரவு தந்தது.
இன்னும் சொல்லப்போனால், அதிமுக தனித்து களவாடுவதற்கான அனைத்து சாதகமான சூழலையும் உருவாக்கி தந்ததாகவே பார்க்கப்பட்டது.

காலி டெபாசிட்
இறுதியில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவானது, 43,923 வாக்குகளை மட்டுமே பெற்றது... ஆனாலும் டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டது. கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று சொல்லி வந்த அதிமுகவுக்கு இந்த தேர்தல் ஒரு சவாலாகவே இருந்தது. எனினும், திமுகவின் அதிரடி வியூகத்துக்கு முன்னால் எதுவும் எடுபடாமலேயே போய்விட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுகவின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னையில் வருகிற 9-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது..

மெயின் மேட்டர்
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மொத்தம், 85 மாவட்டக் கழக செயலாளர்கள் பங்கேற்க உள்ளார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழக்க காரணமாக இருந்த விஷயங்கள் குறித்தும், கட்சியின் அடுத்தக்கட்ட செயல்பாடு பற்றியும் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தில் விரிவாக பேச உள்ளாராம்.. அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சியை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும், இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாகவும் தெரிகிறது.. அதேபோல, 17-ந்தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானம் சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் வர உள்ளதால் அது பற்றியும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட உள்ளது.

ப்ளான் 3
ஆனால், இதெல்லாம் வழக்கமான நடைமுறைகள் என்றாலும், எடப்பாடி பழனிசாமி, வேறு சில காய்நகர்த்தல்களை துவக்கி உள்ளாராம்.. அதிமுகவினரிடம் பழைய உறுப்பினர் கார்டு மட்டுமே உள்ளது.. இடைக்கால பொதுச்செயலாளர் கையொப்பமிட்ட புதிய உறுப்பினர் கார்டு இன்னும் வழங்கவில்லை.. அதனால், புதிய உறுப்பினர் கார்டும் தயாராகி கொண்டிருக்கிறது. அந்த கார்டுகள், அனைத்து உறுப்பினர்களுக்கும் சென்றடையும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் பணியாற்ற தேவையான ஆலோசனை வழங்கப்படுவதுடன், 3 மாதத்திற்குள் இந்த பணிகளை முடித்து கட்சி தேர்தல் நடத்தவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளாராம்..

மாறுது கோலங்கள்
பொதுவாக, அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழி வேண்டும்.. 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழி வேண்டும்.. அதனால், இப்போதுள்ள சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.. இதற்காகவே அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறதாம்.. எப்படி பார்த்தாலும், வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் ராயப்பேட்டையில் கூட்டியுள்ள ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.. இதில், முதல் நாள் மாவட்ட செயலாளர்களுடனும், மறுநாள் மாநில நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த போகிறாராம் எடப்பாடி பழனிசாமி.

ID CARD எங்கே
இந்த கூட்டங்கள் முடிந்த பிறகுதான், முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதில் ஒன்றுதான், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, அதிமுக உறுப்பினர் அட்டையில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் போட்டோக்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.. ஆனால், தற்போது, எடப்பாடி பழனிசாமி போட்டோவும் அந்த உறுப்பினர் அட்டையில் இடம்பெறும் என்கிற புதிய தகவலும் வெளியாகி இருக்கிறது.. அநேகமாக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்று, கட்சியின் தலைமை பதவியை முழுமையாக கைப்பற்றி, அதற்கு பிறகே தன்னுடைய அடுத்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

ஆலமரம் விழுதுகள்
அதிமுக என்ற ஆலமரத்தின் நிறுவன தலைவர் எம்ஜிஆர்.. அந்த கட்சியை ஏழை எளிய மக்களிடம் கொண்டு சேர்த்து அதன் அஸ்திவாரத்தை வலுவாக்கினார்... எம்ஜிஆருக்கு பிறகு தலைமை பொறுப்பை வகித்த ஜெயலலிதா, அந்த அடித்தளத்தை இன்னும் வலுவாக்கி, யாராலும் அசைக்க முடியாத சக்தியாக ஆழமாக வேரூன்றினார்.. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தி வருகிறார்.. இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டோக்களுடன் எடப்பாடி பழனிசாமியின் போட்டோவும் புதிய உறுப்பினர் அட்டையில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன..

கடிவாளம்
அந்தவகையில் முதல் அதிரடியாக, பிரிந்து சென்றவர்களை மறுபடியும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளாராம் எடப்பாடி.. ஆனால், வழக்கம்போல், ஓபிஎஸ் + டிடிவி தினகரன் இவர்கள் 2பேரை தவிர, மற்ற அனைவரையும் மறுபடியும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதிலும் மிகவும் உறுதியாக உள்ளாராம்.. வருகிற எம்பி தேர்தலுக்குள் அதிருப்தியாளர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

அன்வர் ராஜா
எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகிகளும் தீயாய் களத்தில் குதித்துள்ளனர்.. ஓபிஎஸ் + டிடிவி தினகரன் கூடாரத்தின் மீது குறி விழுந்துள்ளதால், அநேகமாக, பல நிர்வாகிகள் இங்கிருந்து எடப்பாடி பக்கம் தாவக்கூடும் என்றும் தகவல்கள் பரபரக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு, மூத்த தலைவர் அன்வர் ராஜா உள்ளிட்டோரையும் சமாதானப்படுத்தி கட்சிக்குள் கொண்டுவருவதற்கான பிளான்களை எடப்பாடி தரப்பு கையில் எடுத்ததாக செய்திகள் வலம்வந்தன.. இப்போது அந்த பணிகள் துரிதமாகி உள்ளதால், அதிருப்தியில் பிரிந்து கிடக்கும் மூத்த தலைவர்கள், அதிமுகவின் நலன் கருதி, எடப்பாடி பக்கம் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது... என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

+ பாயிண்ட்ஸ்
ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இப்படி பிஸியாக இருந்தாலும், எம்பி தேர்தல் கூட்டணி விவகாரத்தில் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. கடந்த தேர்தல்களில், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான், அதிமுகவிற்கான பாரம்பரிய வாக்குகளும் விழாமல் போய்விட்டதாக எடப்பாடி தரப்பிலேயே சில மூத்த தலைவர்கள் பொருமி வருகிறார்கள்.. சிலர் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியும் வருகிறார்கள்.. மற்றொருபக்கம் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனையும் இணைத்து கொள்ளும்படி பாஜக பிரஷர் செய்து வருவதால், கையை பிசைந்து எடப்பாடி தரப்பு நிற்பதாக சொல்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், ஒற்றை தலைமையா தான் உருவெடுக்கும்போது, இப்படியான நெருக்கடிகள் தமக்கு குறையும் என்றும், பாஜக தவிர்த்து வேறு சில கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க எடப்பாடி டீம் முன்வரலாம் என்றும் சொல்கிறார்கள்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications