சென்னையில் சோகம்.. நிழற்குடை சீரமைக்கும்போது மின்சாரம் தாக்கி மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் படுகாயம்
சென்னை: சென்னை மணலி புதூரில் பேருந்து நிழற்குடை அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியர்கள் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் முதல் மண்டலமாக இருக்கும் திருவொற்றியூரை ஒட்டி மணலி புதுநகர் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இங்குள்ள நிழற்குடை ஒன்று நீண்ட நாட்களாக பழுதான நிலையிலேயே இருந்திருக்கிறது. இதை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர் கோரிக்கையை வைத்து வந்திருக்கின்றனர். இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் இதனை சரி செய்யும் பணியில் இன்று ஈடுபட்டனர். பழைய நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடையை அமைக்க அவர்கள் திட்டமிட்டனர்.

இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது எதிர்பாராத விதமாக நிழற்குடை அமைக்க தேவையான இரும்பு கம்பி, மேலே சென்ற மின்சார வயர் மீது உரசியது. இந்த சம்பவத்தில் 4 மாநகராட்சி ஊழியர்களும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் வந்த மருத்துவ உதவியாளர்கள், படுகாயங்களுடன் இருந்த 4 மாநகராட்சி ஊழியர்களையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இவர்கள் 4 பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. அதேபோல புதிய பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ஆங்காங்கே மரக்கிளைகள் உடைந்து விழுந்து மின் வயர்கள் அறுந்து போகும் நிலை உருவாகியுள்ளது. இதனை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக மரக் கிளைகளை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி வருகின்றனர்.
இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும் போது உரிய பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் மின்சாரம் தாக்கி 4 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications