கொரோனா பாதிப்பு.. இன்று 4 மாவட்டங்களில் ஒரு நாள் முழு ஊரடங்கு.. அத்தியாவசிய கடைகள் மூடல்
சென்னை: கொரோனாவின் தாக்கம் காரணமாக திருவாரூர், கடலூர், அரியலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் நெல்லை மாநகராட்சி, தென்காசி பேரூராட்சி, நகராட்சிகளில் மட்டும் இன்று ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் திருவாரூர், அரியலூர், கடலூர், தஞ்சை ஆகிய 4 மாவட்டங்களிலும் நெல்லை மாநகராட்சியில் மட்டும் நாளை முழு ஊரடங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் தென்காசி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர். இந்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இடங்களில் மருத்துவமனை, மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு மக்கள் வெளியே வரக் கூடாது. காய்கறி, மளிகைக் கடைகள் மூடியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீறி வெளியே வந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் 29 பேரும், தஞ்சையில் 57 பேரும் கடலூரில் 28 பேரும் அரியலூரில் 8 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் நெல்லை மாவட்டத்தில் 63 பேருக்கு கொரோனா உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் செவ்வாய்க்கிழமை வரை சேலம், திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications