சென்னையில் ஷாக்.. கடலில் மூழ்கி 4 பேர் பலி.. பெண்ணை காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து பலியான சோகம்
சென்னை: சென்னை ஈசிஆர் அருகே விடுமுறையை கொண்டாட சென்ற நிலையில் கடலில் இறங்கிய 4 பேர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர். ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்றபோது அனைவரும் கடலில் மூழ்கி அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் சிவதாணு. இவரது மகள் பெயர் நிவேதிதா. இந்நிலையில் தான் சிவதாணு தனது மகள் நிவேதிதா மற்றும் குடும்ப நண்பர்களுடன் சென்னை ஈசிஆர் அருகே கானத்தூரில் அமைந்துள்ள தனியார் விடுதிக்கு விடுமுறை கொண்டாட்டத்துக்காக சென்றார்.

சிவதாணுவுடன் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பிரசாந்த். திண்டுக்கல் மாவட்டத்தை நவீன், சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த மானஸ் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இதில் மானஸ் அமெரிக்காவில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். இவர் விடுமுறைக்காக சென்னை வந்திருந்தார்.
இதையடுத்து அவர்கள் 5 பேரும் நேற்று சென்னை கானத்தூரில் உள்ள கடற்கரைக்கு சென்றனர். அப்போது நிவேதி, பிரசாந்த், மானஸ், நவீன் ஆகியோர் கடற்கரையில் குளித்து கொண்டிருந்தனர். இந்த வேளையில் ராட்சத அலையில் நிவேதிதா சிக்கினார். அவரை அலை கடலுக்குள் இழுத்து சென்றது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை சிவதாணு உடனடியாக கடலுக்குள் குதித்து மகள் நிவேதிதாவை காப்பாற்ற முயன்றார். ஆனால் சிவதாணுவையும் கடல் அலை இழுத்து சென்றது. இந்த சமயத்தில் நிவேதிதாக கடல் அலையில் இருந்து தப்பி கரை வந்த நிலையில் சிவதாணுவை தேடி பிரசாந்த் மானஸ், நவீன் ஆகியோர் கடலுக்குள் சென்றனர். அப்போது அவர்கள் 3 பேரும் கடலில் மூழ்கினர். இதை பார்த்து நிவேதிதா கதறினார்.
உடனடியாக அவர் கானத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், தீயணைப்பு வீரர்கள் 4 பேரின் உடல்களையும் தேடினர். நேற்று இரவு சிவதாணுவின் உடல் கிடைத்த நிலையில் இன்று மற்ற 3 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியது. 4 பேரின் உடல்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
நிவேதிதா ஒரே நேரத்தில் தனது தந்தை மற்றும் குடும்ப நண்பர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரையும் கண்முன்னே கடலில் பறிகொடுத்துள்ளார். இதனால் அவர் கடும் அதிர்ச்சியில் உள்ளார். இதுபற்றி கானத்தூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட சென்ற 5 பேரில் 4 பேர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் ஈசிஆர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications