5 மாநில சட்டசபைத் தேர்தல் 2021: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. வெற்றி பெற போவது யார்?
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. முடிவுகள் வெளியாக நள்ளிரவாகி விடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
சென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன் பிறகு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். மக்கள் தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும் என்று காலை 10 முதல் முன்னணி நிலவரங்கள் தெரிய வரும்.
Recommended Video
தமிழகம், கேரளா,புதுச்சேரியில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாம் மாநிலத்திற்கு மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்காளத்திற்கு 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக, 3வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி அரியணை ஏற நினைக்கிறது. எதிர்கட்சியான திமுக 10 வருடத்திற்கு முன்பு பறி கொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றி அரியணையில் அமர நினைக்கிறது. திமுக கூட்டணி வென்று ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் பாஜகவின் புதிய கூட்டணி அமைந்துள்ளது. இந்தக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.
கேரளாவில் வலுவான ஆளும் இடதுசாரிக் கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி களத்தில் உள்ளது. பாஜகவும் இந்த முறை ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் கட்சியும், அதை எதிர்த்து பாஜகவும் நேருக்கு நேர் களத்தில் உள்ளன. முதல்வர் மமதா பானர்ஜி 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார். கருத்துக்கணிப்புகளில் பல மமதாவிற்கு சாதகமாகவே உள்ளது. பாஜக முதல் முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக உள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கருத்துக்கணிப்பும் பாஜகவிற்கு சாதகமாகவே உள்ளது. மக்கள் தங்களின் தீர்ப்பினை எழுதி விட்டனர். அத்தனையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகி உள்ளன. தற்போது வாக்குகள் எண்ணபட தொடங்கியுள்ளன. மக்கள் தீர்ப்பு யாருக்கு சாதகம் என்று இறுதி முடிவு இன்று நள்ளிரவு தெரியவரும்.
5 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 5 மாநிலங்களிலும் தேர்தல் வெற்றியை கொண்டாட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளில் முன்னணி நிலவரம் தெரிய வரும் போதே பட்டாசுகள் வெடித்து கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். இந்த முறை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கொண்டாட்டங்கள், ஊர்வலங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications