"அடுத்த வருஷம் எங்கும் தண்ணீர் தேங்காது" தொடர் ஆய்வில் அமைச்சர் கேஎன் நேரு!
சென்னை: சென்னையில் மழைநீர் அகற்றும் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
கடந்த 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, மழைநீர் வேகமாக வடிந்தது. தென் சென்னை பகுதிகளில் முழுமையாக மழைநீர் வடிந்த நிலையில், வடசென்னை பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

அமைச்சர்கள் ஆய்வு
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் சென்னையில் எழும்பூர் வேலப்பன் தெரு, மாண்டியத் சந்து, மன்னடி, தங்கசாலை தெரு, கொளத்தூர், பெரியார் நகர் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் வடிந்த மழைநீர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், சென்னையில் திரு.வி.க நகர், கொளத்தூர் தொகுதியில் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வரும் காலங்களில் தண்ணீர் தேங்கக் கூடாது என்பதற்காக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சென்னையில் கடந்த மழையின் போது தண்ணீர் தேங்கிய இடங்களை ஒப்பிடுகையில் தற்போது 90 சதவிகித இடங்களில் தண்ணீர் வெளியேறிவிட்டது.

வடசென்னையில் மழைநீர்
சென்னையில் சில இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதற்கு நிநந்தர தீர்வு காண வல்லுநர் குழு மீண்டும் சென்னையில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளது. திருப்புகழ் கமிட்டி இரண்டு பிரிவினராக பிரிந்து மீண்டும் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளது. மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளை ஒப்பிடும்பொழுது வடசென்னை பகுதியில் இயற்கையாக நீர் செல்ல ஓட்டேரி நல்லா கால்வாய் மட்டுமே உள்ளது. அதிக மழை பொழிவு ஏற்படும் போது இந்த கால்வாயில் தண்ணீர் மட்டம் உயர்வதால் தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது.

பணிகள் எப்போது நிறைவு?
இதனை தவிர்க்க ஓட்டேரி நல்லா கால்வாய் மட்டுமின்றி வேறு வழியில் கால்வாய் எடுத்தச் செல்ல முடியுமா என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஓட்டேரி நல்லா கால்வாய் விரிவுபடுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டம் இல்லாத பகுதிகளில் புதிதாக சாக்கடை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழை முடிந்ததும் மீண்டும் மீதமுள்ள பணிகளை தொடங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் மழைநீர் எங்கும் தேங்காது. மீதமுள்ள வடிகால் பணிகள், மழை நின்ற பின்னரே முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications