ஸ்டண்ட்! முதல்வர் கான்வாயை "ஓவர் டேக்" செய்த மர்ம நபர்! பைக்கில் பட்டென பறந்து! இப்படியா பண்ணுவீங்க?
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் முன்பு ஸ்டண்ட் செய்வதற்காக வேகமாக பைக்கில் வந்த இளைஞரை போலீசார் இன்று கைது செய்தனர். இதனால் சம்பவ இடத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் கான்வாய்க்கு கொஞ்சம் பாதுகாப்பு குறைவாக இருப்பதாக அவ்வப்போது புகார்கள் வருவதுண்டு. சமீபத்தில் கூட முதல்வரின் கான்வாயை இளைஞர் ஒருவர் ஓவர்டேக் செய்த சம்பவம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக மாநில முதல்வர்களின் வாகனங்களுக்கு முன்பாகவும், பின்பாகவும் அதிக அளவில் பாதுகாப்பு வாகனங்கள், அரசு அதிகாரிகள் வாகனங்கள் செல்வது வழக்கம். ஒவ்வொரு மாநில முதல்வர்கள் கார்களின் எண்ணிக்கை மாறுபடும்.
ஆனாலும் பெரும்பாலும் ஒரு முதல்வரின் கான்வாயில் பாதுகாப்பு வாகனங்கள், அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்கள் எல்லாம் சேர்த்து குறைந்தது 10 வாகனங்களாவது செல்லும்.

மாற்றம்
தமிழ்நாட்டில் முன்னாள், இந்நாள் முதல்வர்கள் 12 முதல் 15 வாகனங்களை பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் தன்னுடைய கான்வாயில் 12 வாகனங்களை பயன்படுத்தி வந்தார். . இது போன்ற கான்வாய் செல்லும் போது மொத்தமாக போக்குவரத்து நிறுத்தப்படும். மற்ற வாகனங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு முதல்வரின் வாகனம் செல்ல வழி ஏற்படுத்தப்படும். இந்த வாகனங்கள் நெரிசல் குறைவான பகுதிகளில் செல்லும் போது பிரச்சனை இல்லை.

சென்னை
ஆனால் சென்னையில் காலை நேரத்தில் கான்வாய் செல்லும் நேரங்களில் சாலையின் மற்ற போக்குவரத்து மூடப்பட்டு மக்கள் காக்க வைக்கப்படுவது வழக்கம் இதனால் பெரிய அளவில் டிராபிக் ஏற்படுத்துவதும் உண்டு. இது பலமுறை விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காரும் இந்த டிராபிக்கில் சிக்கியது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது வாகன எண்ணிக்கையை 12ல் இருந்து 6 ஆக குறைத்தார்.

என்ன நடந்தது
இந்த நிலையில்தான் முதல்வரின் கான்வாயை சேஸிங் செய்யும் சம்பவங்கள், பின் தொடரும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் முன்பு ஸ்டண்ட் செய்வதற்காக வேகமாக பைக்கில் வந்த இளைஞரை போலீசார் இன்று கைது செய்தனர். சென்னை, காமராஜர் சாலையில் முதல்வர் கான்வாய் வந்து கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் முதல்வரின் கான்வாயை முந்தினார். இதனால் அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

ஸ்டண்ட்
குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர் முதல்வரின் கான்வாய் முன்பு ஸ்டண்ட் செய்தார். பைக்கை வேகமாக முறுக்கி வீலிங் செய்தார். இதனால் சம்பவ இடத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தில் அவரை நிறுத்திய போலீசார் அங்கேயே அவரின் பைக்கை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த இளைஞர் ராயப்பேட்டையை சேர்ந்தவர், அவரின் பெயர் சுஜய்(20) என்பது தெரிய வந்தது. இவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications