ரொம்ப பெருமையாக இருக்கு! இதுதான் உதயநிதியின் துணிச்சல்.. சனாதன பேச்சுக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு
சென்னை: அமைச்சர் உதயநிதி சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பேசிய விஷயம் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் ஆதரவு தெரிவித்துள்ளதோடு அவரை நினைத்து பெருமைப்படுவதாக பாராட்டியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினின் மகனும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசினார். அப்போது அவர் சனாதனத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.

டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் உள்ளிட்டவற்றை எதிர்க்க முடியாது. இவற்றை ஒழிக்க தான் வேண்டும். அதேபோல் தான் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார். இவரது இந்த கருத்து என்பது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு, போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் ஆர்என் ரவியிடம் புகார்களும் வழங்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, ஆளுநர் ஆர்என் ரவிக்கு எழுதிய கடிதத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டுள்ளார். அதோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியை பறிக்க கோரி ஆளுநர் ஆர் என்ரவியிடம் தமிழக பாஜக சார்பில் புகார் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று நடிகர் சத்யராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை வரவேற்றார். அதோடு உதயநிதி ஸ்டாலினை மனம்திறந்து பாராட்டினார். உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு பற்றி சத்யராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சத்யராஜ், ‛‛அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரொம்ப தெளிவாக பேசியுள்ளார். அவரது சிந்தனை தெளிவுக்கும், கருத்திலயல் ரீதியான தெளிவுக்கும், துணிச்சலுக்கும் பராட்டுகள். அவர் ஒவ்வொரு விஷயத்தையும் கையாளும் விதம் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.
முன்னதாக சமீபத்தில் நடிகர் சத்யராஜின் 94 வயது நிரம்பிய தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக கடந்த மாதம் 11ம் தேதி காலமானார்.இதற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த நிலையில் சென்னையில் உள்ள சத்யராஜின் இல்லத்துக்கு இன்று சென்று நேரில் ஆறுதல் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டவர்கள் இருந்தனர். இதுபற்றி நடிகர் சத்யராஜ் கூறுகையில், ‛‛நேரில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி'' என்றார்.












Click it and Unblock the Notifications