1.5 லட்சம் பணத்தை போலீஸார் எடுத்துட்டு போய்ட்டாங்க! அவதூறு பரப்பியதாக நடிகை ரோஜா ஸ்ரீ மீது வழக்கு
சென்னை: ஒரு கிளப்பில் நடந்த அடிதடி கேஸில் தனது கணவரை கைது செய்த போலீஸார் அவரை தன் கண்களில் காட்டாமல் உள்ளதாக நடிகை ரோஜா ஸ்ரீ புகார் கூறிய நிலையில் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு கிளப்பில் ஓய்வு பெற்ற ஏடிஜிபி மகன் செல்வபாரதி வந்திருந்தாராம். அப்போது அங்கு அதிமுக நிர்வாகி தூண்டில் ராஜா என்பவரும் நடிகை ரோஜாஸ்ரீயின் கணவர் கணேஷ் குமாரும் சென்றிருந்தனராம்.
இந்த நிலையில் ஏதோ தகராறில் செல்வபாரதி, தூண்டில் ராஜாவை கடுமையாக தாக்கினாராம். இதில் தூண்டில் ராஜாவுக்கு தையல் போடும் நிலை ஏற்பட்டதாம். முகத்தில் மது பாட்டிலால் குத்தியதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நிலை உள்ளதாம்.
அப்போது அவர்களது சண்டையை கணேஷ் குமார் தடுத்தாராம். இந்த நிலையில் அவரை கடந்த 25 ஆம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். தனது கணவரை தன்னிடம் காட்டாமல் வைத்திருப்பதாக ரோஜா ஸ்ரீ கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ரோஜா ஸ்ரீ கூறுகையில், செல்வபாரதி, தூண்டில் ராஜாவை தாக்கியதால் அவருக்கு கையில் இரு நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது என் கணவர் யாரையும் தாக்காமல் இருவரையும் விலக்கிதான் விட்டார்.
இந்த சம்பவத்தில் செல்வபாரதி கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் ஏடிஜிபியின் மகன் என்பதால் அவருடைய அழுத்தத்தின் பேரில் எனது கணவரை விசாரணைக்கு என அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை என் கண்ணில் காட்டாமல் வைத்திருக்கிறார்கள்.

அவர் மீது ஏதோ பெரிய அளவில் பொய் கேஸ் போட என் வீட்டில் சில ஆவணங்களையும் ஒன்றரை லட்சம் பணத்தையும் போலீஸார் ரெய்டு நடத்தி கொண்டு சென்றார்கள். அடிதடி கேஸுக்கு என் வீட்டில் எதற்காக ரெய்டு நடத்த வேண்டும், என் வீட்டில் இருந்த ஆவணங்களையும் பணத்தையும் எதற்காக கொண்டு செல்ல வேண்டும்?
என் கணவரை கண்ணில் காட்ட சொல்லுங்கள். அவரை மீட்க உதவுங்கள் என ரோஜா ஸ்ரீ கண்ணீருடன் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் நடிகை ரோஜா ஸ்ரீ அவதூறு பரப்பியதாக குற்றம்சாட்டி, அவர் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தனக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுக் கொள்வதாக ரோஜா ஸ்ரீ தனது இன்ஸ்டா பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications