திமுகவின் கனவு பட்ஜெட்.. கானல் நீர்.. ரூ.8 லட்சம் கோடி கடன்.. போட்டு தாக்கும் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: திமுக அரசின் பட்ஜெட் என்பது கானல் நீர் போன்றது; மக்களுக்கு பயன் தராது என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். திமுக கூட்டணி கட்சியினர் பட்ஜெட் குறித்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பாஜக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் பட்ஜெட் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் உயர்ந்துள்ளது. வரவு செலவு திட்டத்தில் குளறுபடி உள்ளது.
கிராமப்புறங்களில் சாலைகளை சீரமைக்க குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியை விட தற்போது கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை. மக்களுக்கு எந்தவொரு புதிய திட்டமும் இல்லை; பெரிய திட்டமும் இல்லை.
திமுக அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது; கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்கள். எப்போதும் போல்தான் அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்திவிட்டு புதுமைப்பெண், உரிமைத் தொகை திட்டம் வழங்கப்படுகிறது. திமுக அரசின் பட்ஜெட் என்பது கானல் நீர் போன்றது; மக்களுக்கு பயன் தராது . கிராமப்புறங்களில் சாலையை சீரமைக்க ஒதுக்கி நிதித்தொகை மிகவும் குறைந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications