எடப்பாடிக்கே ‘மவுசு’! ஓபி ரவீந்திரநாத் சுயேட்சை எம்பி தான்.. ஒரு தாக்கமும் இல்லை.. ஜெயக்குமார் பரபர!
சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு ஓபி ரவீந்திரநாத்தை அழைப்பதால் ஒரு தாக்கமும் ஏற்படப்போவது இல்லை, அவரை சுயேட்சை என்கிற முறையில் அழைத்திருப்பார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) முதல் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை நடைபெற உள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுவின் மக்களவைத் தலைவர் என்ற முறையில் தேனி தொகுதி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் கலந்துகொள்ள உள்ளதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
"நாளை டெல்லியில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அழைப்பு விடுத்ததின் பேரில் அ.தி.மு.க சார்பில் மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு சிறப்பித்து ஆலோசனை வழங்க உள்ளேன்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரவீந்திரநாத்.
அதிமுகவில் இருந்து ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவரை அதிமுக எம்.பியாக தொடர வைக்க வேண்டாம் என்றும் அதிமுக சார்பில் இருந்து மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பபட்டு இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தீர்ப்பை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்தச் சூழலில் ஓ.பி.ரவிந்திரநாத் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிமுக சார்பில் அதிமுக மாநிலங்களவை தலைவர் ராஜ்யசபா எம்.பி தம்பிதுரையும் கலந்துகொள்ள உள்ளார். நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஓபிஎஸ் அழைக்கப்படவில்லை, எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டு, பிரதமர் மோடிக்கு அருகே அமரவைக்கப்பட்டு இருந்தார்.
இதனால், ஓபிஎஸ் தரப்பை பாஜக கைவிட்டு விட்டது என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில், அதிமுக மக்களவைத் தலைவர் எனக் குறிப்பிட்டு ஓபி ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு ரவீந்திரநாத்தை அழைப்பதால் ஒரு தாக்கமும் ஏற்படப்போவது இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "இதுவரை அதிமுகவில் 1.75 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளார்கள். இன்று கடைசி நாள் என்பதால், பலரும் கட்சியின் உறுப்பினர்களாக இணைய முன்வந்துள்ளார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் எடப்பாடியாருக்கு கொடுக்கப்பட்ட மரியாதை அனைவருக்கும் தெரியும்.
ஓ.பி.ரவீந்திரநாத்திற்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை. ரவீந்திரநாத் அதிமுக உறுப்பினர் இல்லை என்று கடிதம் கொடுத்துள்ளோம். அவரை சுயேட்சை என்கிற முறையில் அழைத்திருப்பார்கள். அவரை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கூப்பிடுவதாலும் ஒரு தாக்கமும் ஏற்படப்போவது இல்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் 26 கட்சிகள், எங்கள் கூட்டணியில் 38 கட்சிகள். 26 பெரியதா? 38 பெரியதா?" என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications