Exclusive: கனிமொழியை பாராட்டியதில் தவறு இல்லை.. தலைமை முடிவுக்கு கட்டுப்படுகிறேன்- நவநீதகிருஷ்ணன்
சென்னை: கனிமொழி குறித்து திருமண விழாவில் தாம் பேசியதில் எந்த தவறும் இல்லை என கூறுகிறார் நவநீதாகிருஷ்ணன் எம்.பி.
கட்சிப் பதவியில் இருந்து தன்னை நீக்கி அதிமுக தலைமை எடுத்துள்ள நடவடிக்கைக்கு தாம் கட்டுப்படுவதாக கூறியிருக்கிறார்.
அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நவநீதகிருஷ்ணனை ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு பேசிய போது இதனைக் கூறினார்.
எனக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் கற்றுக்கொடுத்தவர் சகோதரி கனிமொழி.. அதிமுக எம்.பி புகழாரம்
கட்சித் தலைமை
"என்னை பொறுத்தவரை கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவியை என்னிடம் இருந்து பறித்தது குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. கழகம் தற்போது ஆட்சியில் இல்லாத சூழலில் நான் முரண்படுவது முறையாக இருக்காது. அரசியல் நாகரீகம் கருதி திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோசன் இல்ல மண விழாவில் கலந்துகொண்டேன். அந்த விழாவில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கருதுகிறேன்."
பேசியது சரி
"கனிமொழி குறித்து நான் பேசியதில் தவறு இருந்ததாக தெரியவில்லை. நான் மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வாகி சென்ற போது, பல நேரங்களில் எனக்கும் திமுக எம்.பி.திருச்சி சிவாவுக்கும் அவையில் கருத்து மோதல் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் அதில் தலையிட்டு நவநீதகிருஷ்ணன் புதிதாக மாநிலங்களவைக்கு வந்திருக்கிறார் பேசட்டும், விடுங்க என சிவாவை அமைதிப்படுத்தி இருக்கிறார். அதேபோல் அதிமுக மத்திய அமைச்சரிடம் எப்படி பேச வேண்டும் என்பதையும் இண்டர்னல் மீட்டிங் ஒன்றில் சொல்லிக்கொடுத்தார்."
எனக்குத் தெரியாது
"அறிவாலயத்துக்கு சென்றது தொடர்பாக ஜெயக்குமார் என்ன பேசினார் எனக்கு தெரியாது, நீங்கள் சொல்லித்தான் இப்போது தெரியும். ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற போது ஓ.பி.எஸ். அண்ணன் அந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். இதேபோல் எடப்பாடி பழனிசாமி தாயார் மறைந்த போதும், ஓ.பி.எஸ்.ஸின் மனைவி காலமான போதும் ஸ்டாலின் துக்கம் விசாரிக்கச் சென்றார். அரசியலில் இது போன்ற நிகழ்வுகள் நாகரீகமானவை. அந்த வகையில் தான் நானும் எனக்கு வந்த அழைப்பை ஏற்று திருமண விழாவில் கலந்துகொண்டேன்"
ஏற்றுக் கொள்கிறேன்
" என் மீதான கட்சி தலைமையின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தை இன்னும் நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. நானெல்லாம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் புத்தகங்கள் படிக்கக் கூடியவன், அதனால் இதை வைத்து அரசியல் லாவணி கச்சேரி நடத்த விரும்பவில்லை."