ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடர சவுக்கு சங்கருக்கு அனுமதி மறுத்த அட்வகேட் ஜெனரல்.. பரபர உத்தரவு!
சென்னை: அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்ததாக கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரிய சவுக்கு சங்கருக்கு அனுமதி வழங்க, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் மறுத்து விட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து வருகிறார். அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

இதுசம்பந்தமாக கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நீதிபதிக்கு எதிராக விமர்சனம் செய்ததாக கூறி, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி, சவுக்கு சங்கர், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு மனு அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுத்துள்ளதாகவும், ஆர்.எஸ்.பாரதியின் கருத்துகள் நீதித்துறையை களங்கம் விளைவிக்கும் வகையில் இல்லை எனவும், அது நீதிமன்ற அவமதிப்பு செயல் அல்ல என்றும் கூறி, சவுக்கு சங்கரின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications