சென்னைக்கு படையெடுத்த மக்கள்! ஊர்ந்து ஊர்ந்து செல்லும் கார்கள்! டோட்டல் டிராஃபிக் ஜாம்!
சென்னை: ஊரோடும், உறவுகளோடும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு நாளை வேலை நாள் என்பதால் சென்னைக்கு மக்கள் சாரை சாரையாக படையெடுத்துள்ளனர். இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பேருந்து நிலையங்களில் சென்னை செல்லும் பஸ்களில் இடம்பிடிக்க ஒரு பக்கம் கூட்டம் அலைமோதுகிறது என்றால் மற்றொரு பக்கம் கார்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்வதை காணமுடிகிறது. குறிப்பாக செங்கல்பட்டு டோல்கேட் தாண்டியதும் சொல்லவே தேவையில்லை, அந்தளவு சாலைகள் கடும் போக்குவரத்து நெரிசலால் திணற ஆரம்பித்துள்ளன. இப்பவே இப்படியென்றால் இன்னும் அதிகாலை நேரத்தில் எத்தனை கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்லுமோ எனத் தெரியவில்லை.

சிங்கப்பெருமாள் கோவிலுக்கு முன்பாகவே இப்போது போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்துவிட்டது. இஞ்ச் பை இஞ்ச்சாக வாகனங்கள் நகர்வதால் 2 கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமாக கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் போக்குவரத்துக் காவலர்கள் கொட்டும் பனியிலும் நின்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் திருச்சி சமயபுரம் டோல்கேட் தாண்டியதும் சரி, உளுந்தூர் பேட்டை டோல்கேட் தாண்டியதும் சரி கணக்கு வழக்கின்றி வாகனங்கள் சென்னைக்கு செல்வதால் ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் சைடு வாங்குவதே சிரமமாக இருக்கக் கூடிய நிகழ்வும் இருக்கிறது.
5 நாள் விடுமுறையை ஒட்டி கடந்த 13 மற்றும் 14ஆம் தேதி சென்னையிலிருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் இன்று ஒரே நாளில் மீண்டும் சென்னை திரும்புகின்றனர். வரும் 21ஆம் தேதி மூன்றாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் பெரும்பாலான அலுவலகங்கள், பள்ளிகள் வேலை நாளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications