காலாவதியான ஆன்லைன் ரம்மி தடை மசோதா..ஆளுநர் ஆர்என் ரவியை நாளை சந்திக்கும் சட்ட அமைச்சர் ரகுபதி! ஏன்?
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா காலாவதியான நிலையில் ஆளுநர் ஆர்என் ரவியை நாளை காலை 11 மணிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் பின்னணி விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
கேரளாவை போல் தமிழகத்திலும் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடைமே மோதல் போக்கு உள்ளது. ஆளுநர் ஆர்என் ரவியின் சனாதன தர்மம் தொடர்பான பேச்சுக்கும், திராவிடத்துக்கு எதிரான கருத்துகளுக்கும் திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே தான் சமீபத்தில் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வேண்டும் என ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சியின் எம்பிக்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் கொடுத்தனர். இதில் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காலாவதியான மசோதா
மேலும் தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவதாக தொடர்ந்து திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக தற்போது பெரும் விவாதத்தை கிளப்பி இருப்பது ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதா தான். இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்காமல் இருந்ததால் காலதாமதம் செய்ததால் தற்போது அந்த மசோதா காலாவதியாகிவிட்டது.

அவசர சட்டத்துக்கு ஒப்புதல்
அதாவது தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் சிலர் கடனில் சிக்கி தற்கொலை செய்துவிடுகின்றனர். இதனை தடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

தாமதத்தால் காலாவதி
இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்க தடை விதிக்கும் வகையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கடந்த அக்டோபர் 19ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா அக்டோபர் 28ல் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியது. இந்த மசோதா காலாவதி தேதியை நெருங்கிய நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆர்என் ரவி சில சந்தேகங்களை கேட்டார். இதற்கு தமிழக அரசு அடுத்த 24 மணிநேரத்தில் பதிலளித்தது. இருப்பினும் ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் தான் இந்த சட்ட மசோதா கடந்த 27 ம் தேதி காலாவதியானது.

நாளை சட்ட அமைச்சர் சந்திப்பு
இந்நிலையில் தான் நாளை காலை 11 மணிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் மாளிகையில் ஆர்என் ரவியை சந்தித்து பேச உள்ளார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்க தடை மசோதா பற்றி பேச நேரம் ஒதுக்கீடு செய்யும்படி சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ரகுபதி சார்பில் கேட்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சட்டமசோதா காலவதியான நிலையில் நாளை காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் ஏற்படும் பாதிப்பு பற்றியும், நிரந்தர சட்டத்துக்கான அவசியம் குறித்தும் அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர்என் ரவியிடம் விளக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications