ஓட்டு போட வந்த பிரேமலதாவிடம் வாக்காளர்கள் வைத்த கோரிக்கை.. உடனே ஏற்பாடு.. சில்லுனு ஆன சாலிகிராமம்
சென்னை: குடும்பத்துடன் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது வாக்கினைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார். அந்த வாக்குச்சாவடியில் காத்திருந்த வாக்காளர்களின் வேண்டுகோளை ஏற்று அங்கு மின்விசிறிகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் பிரேமலதா.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. 234 தொகுதிகளிலும் அமைதியான முறையில் காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 5.73 கோடி பேர் வாக்காளர்கள் கொண்டு நடைபெறும் இந்த தேர்தலில் தேர்தலில் 442 பெண்கள் உள்பட 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

33,133 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச்சாவடி மையங்களில் அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உட்பட பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவிகிதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மாவட்டங்களின் அளவிலும் 50 சதவிகித்தைக் கடந்துள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் குளோபல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் தனது இளைய மகனும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் தேமுதிக வேட்பாளருமான விஜய பிரபாகரன், நடிகரும், மூத்த மகனுமான சண்முக பாண்டியன் ஆகியோருடன் வந்து தங்களின் வாக்கினைப் பதிவுச் செய்தார்.
வாக்குச்சாவடிக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த்திடம் வாக்களிக்க வரிசையில் நின்றவர்கள் போதுமான காற்றோட்டம் இல்லை என புகார் தெரிவித்தனர். வயதானவர்களுக்கு கஷ்டமாக இருப்பதாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி அலுவலரிடம் அனுமதி பெற்று அங்கு மூன்று ஃபேன்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் பிரேமலதா விஜயகாந்த்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்கினைப் பதிவுச் செய்ய வேண்டும். முதல்முறை வாக்காளர்கள் தங்களின் வாக்கினை சிந்தித்து வாக்குப்பதிவு செய்ய வேண்டும். திமுக 234 இடங்களில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பார்" என்று தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தேமுதிக 10 தொகுதிகளில் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.













Click it and Unblock the Notifications