விவசாயம் முதல் வானிலை முன்னறிவிப்பு வரை! கவனம் பெறும் திமுகவின் ஏஐ வாக்குறுதிகள்!
சென்னை: தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் செய்யப்பட்டுள்ள சாதனைகளும், அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களும் வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளன. உலகளாவிய தொழில்நுட்பப் போட்டியில் தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் திட்டங்கள் வடிவமைக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு கல்வித் துறையில் கவனிக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது. டிஎன் ஸ்பார்க் திட்டத்தின் மூலம் 3,000 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏஐ, ரோபாட்டிக்ஸ் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அரசு வழங்கும் மடிக்கணினிகளில் பெர்ப்லெக்ஸிட்டி போன்ற நவீன ஏஐ வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது கிராமப்புற மாணவர்களுக்கும் உயர்தரத் தொழில்நுட்பம் கிடைப்பதை உறுதி செய்வதாகப் பார்க்கப்படுகிறது. அனைத்துப் பட்டப்படிப்புகளிலும் ஏஐ பாடங்களைக் கட்டாயமாக்கி அடுத்த 3 ஆண்டுகளில் 8 லட்சம் ஏஐ தகுதியுள்ள பட்டதாரிகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது திமுக.

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்டறியும் ஐடிஎம்எஸ் கேமராக்கள், யானைகள் இரயில் மோதி உயிரிழப்பதைத் தடுக்க மதுக்கரை பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஏஐ கண்காணிப்பு அமைப்புகள் போன்றவை தமிழ்நாடு ஏஐ பயன்பாட்டில் அடுத்தக் கட்டத்தை எட்டியிருப்பதற்கான சான்றுகளாகக் கருதப்படுகிறது. நீதித் துறையில் சு-வாஸ் மென்பொருள் மூலம் தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன.
தமிழ்நாடு ஏஐ மிஷன் 2.0 இயக்கம், இந்தியாவிலேயே முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு ஆழ் தொழில்நுட்பக் கொள்கை ஆகியவை மாநிலத்தின் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. தமிழ் மொழிக்கான பெரிய மொழி மாதிரிகளை (எல்.எல்.எம்) உருவாக்க தமிழ்-ஏஐ ஆய்வு நிதிநல்கை வழங்கப்பட உள்ளது. குறு, சிறு நிறுவனங்களுக்கு உதவ ஏஐ கிளீனிக்ஸ் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி கவனத்தை ஈர்த்துள்ளது.
தாலுகா அளவில் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வழங்க ஏஐ மைக்ரோ கிரிட்ஸ் அமைக்கப்படும் என்கிற திமுகவின் வாக்குறுதி விவசாயம், பேரிடர் மேலாண்மை போன்றவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகராக மாற்ற முடியும் என்கின்றனர் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள். இது நவீன மாற்றங்களை விரும்பும் இளம் வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications