அதிமுக இதை செய்திருக்கக் கூடாது.. அதுவும் கூட்டணியில் இருந்துகொண்டே.. அமர் பிரசாத் பதிவிட்ட ட்வீட்!
அதிமுக குறித்து பாஜகவின் அமர் பிரசாத் பதிவிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பாஜக உடனான கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக இப்படி செய்திருக்க கூடாது என்று தமிழ்நாடு பாஜகவின் முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். பாஜகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ள நிலையில், அமர் பிரசாத்தின் ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலமாக தமிழ்நாடு பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக அண்ணாமலையின் தலைமை, அமர் பிரசாத் ரெட்டி, வார் ரூம் உள்ளிட்ட பிரச்சினைகளை அனைவரும் சுட்டிக்காட்டியே வெளியேறுகின்றனர்.
நேற்று தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த சிடி நிர்மல் குமார், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

பாஜக உட்கட்சி பூசல்
இவரது விலகலே தமிழ்நாடு பாஜக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக ஐடி விங் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதேபோல் சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகினார். இவர்கள் அனைவருமே அண்ணாமலையின் தலைமையையும், வார் ரூம் பிரச்சினைகளையுமே சுட்டிக்காட்டினர்.

அதிமுகவில் இணைந்த இருவர்
அதேபோல் திருச்சி சிவா பாஜகவில் இருந்து விலகிய போது அமர் பிரசாரத் ரெட்டியை குற்றம்சாட்டி இருந்தார். இதனால் தமிழ்நாடு பாஜக விவகாரம் பேசுபொருளாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அண்ணாமலையை விமர்சித்துவிட்டு பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார் மற்றும் மதுரை சரவணன் ஆகியோர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

அதிமுக பற்றி அமர்பிரசாத்
பாஜகவுடனான கூட்டணியில் அதிமுக இருந்து வருகிறது. இருப்பினும் பாஜகவில் இருந்து விலகும் நிர்வாகிகளை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அடுத்தடுத்து அரவணைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவின் முக்கிய நிர்வாகியும் அண்ணாமலையின் ஆதரவாளருமான அமர்பிரசாத் ரெட்டி, கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு அதிமுக இப்படி செய்திருக்கக் கூடாது. அண்ணாமலை தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

யாரை சொல்கிறார் அமர்பிரசாத்?
அதுமட்டுமல்லாமல், நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா? என்றும் பதிவிட்டுள்ளார்.

செல்வாக்கு இல்லை
அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்திருப்பது அங்கு துளியும் செல்வாக்கு இல்லை என்பதை காட்டுகிறது. கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக கருதிய எடப்பாடி பழனிசாமிக்கு வாக்காளர்கள் பாடத்தை புகட்டியுள்ளனர் என்றும் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், பாஜகவின் முக்கிய நிர்வாகி அதிமுகவை நேரடியாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications