வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாக்காளர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று முதல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.

மூன்றாவது முறையாக இந்தியாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து இந்திய கூட்டணி என்ற பெயரிலும் களம் காண்கிறது.
நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியற்றுக்கிடையே நான்குமுனை போட்டி நிலவுகிறது. இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வாக்குப் பதிவானது காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வருகிறது.
வாக்குப்பதிவு தீவிரம்: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழிசை செளந்தரராஜன், பிரேமலதா விஜயகாந்த், தமிழச்சி தங்கப்பாண்டியன், உள்ளிட்டோரும், கரூரில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, சென்னை கோயம்பேட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த், சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

எடப்பாடி பழனிசாமி: அந்த வகையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்கை பதிவு செய்த பின்னர் வாக்குச்சாவடிக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முக்கிய கோரிக்கை: இந்நிலையில் வாக்காளர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார் இபிஎஸ். இதுதொடர்பாக எக்ஸில் பதிவிட்டுள்ள அவர்,"உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் திருவிழாவாம் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் இன்று. மக்களாட்சியின் அடித்தளமாம் நம் வாக்குரிமையை நிலைநாட்டும் மகத்தான நாள் இன்று. நமக்கான உரிமைகளை கேட்டுப் பெற வல்லவர்களை, மக்களாட்சியின் விழுமியங்களைக் காத்திடும் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியமான நாள் இன்று.ஆதலால், அனைவரும் தவறாது தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்று, தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications