இதுதான் சான்ஸ்.. 2 "அஸ்திரத்தை" கையில் எடுத்த அதிமுக.. மேடைக்கு மேடை விடாமல் விளாசும் டாப் தலைகள்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு எதிராக 2 முக்கியமான விஷயங்களை அதிமுக கையில் எடுத்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடு தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக அளவிலான நகராட்சி, மாநகராட்சி தலைவர் பதவிகளை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று திமுக, அதிமுக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
முக்கியமாக அதிமுக தலைவர்கள் மாவட்டம், மாவட்டமாக சென்று தேர்தல் பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மாவட்டங்களிலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தேனி, மதுரை மற்றும் தென் மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் விட்டதை பிடிக்க அதிமுக தீவிரமாக முயன்று வருகிறது.
ரொம்ப ஆபத்து.. நம்மகிட்ட தொழில்நுட்பமே இல்லை.. கூடங்குளம் அணுக்கழிவு மையம்.. வைகோ எச்சரிக்கை!
தேர்தல்
திமுக ஆட்சிக்கு வந்ததும் சில மாதங்களிலேயே 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனால் ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அதிமுகவிடம் எதுவும் இல்லை. சட்டசபை தேர்தலின் அலை ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் நீடித்தது. இதனால் அதில் திமுக எளிதாக வென்றது. ஆனால் இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிவிட்டன.
திமுக
இந்த நிலையில் ஆட்சிக்கு எதிராக இருக்கும் சில அதிருப்திகளை அதிமுக தேர்தலில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட சில விஷயங்களை இன்னும் நிறைவேற்றவில்லை. பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டாலும் இன்னும் இரண்டு முக்கியமான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஒன்று நீட் விலக்கு, இன்னொன்று குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் நிதி உதவி.
அதிமுக
ஒரு பக்கம் நீட் விலக்கு மசோதா ஆளுநரின் முடிவால் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் தமிழ்நாடு அரசு இதுவரை நீட் விலக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. இன்னொரு பக்கம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழக்கும் திட்டம் அரசின் பொருளாதார தட்டுப்பாட்டால், ஏழை குடும்பங்களுக்கு மட்டும் ரூபாய் 1000 என்று சுருக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டமும் இன்னும் முறையாக தொடங்கப்படவில்லை.
விவாதம்
இந்த இரண்டு அறிவிப்பும் மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதிமுக இதை பற்றி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் மேடைக்கு மேடை இந்த இரண்டு வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி பேசி வருகின்றனர். 1000 ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள்.. ஆனால் ஏமாற்றிவிட்டார்கள்.
பொங்கலுக்கு பரிசு
பொங்கலுக்கு பரிசு தொகையும் தரவில்லை. அதேபோல் சரியான பரிசு பொருட்களும் தரவில்லை. வாக்குறுதி கொடுத்து மக்களை திமுக ஏமாற்றிவிட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் மாறி மாறி மேடைகளில் விமர்சனம் வைத்து வருகிறார்கள். அதேபோல் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார். எங்களிடம் ரகசியம் இருக்கிறது.
நீட் தேர்வு
ஆட்சிக்கு வந்ததும் சொல்வோம் என்று கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து 10 மாதம் ஆக போகிறது, ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகதான். அவர்களின் ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது., என்று நீட் குறித்தும் அதிமுக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆளும் தரப்பிற்கு எதிராக அதிமுக இந்த 2 அஸ்திரங்களை தீவிரமாக பயன்படுத்தி வருகிறது. இதற்கு ஆளும் திமுக தரப்பு எப்படி பதில் அளிக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.