பொய்! நடப்பது சர்க்கஸ் அரசு தான் என்பதை நித்தம் ஒரு அமைச்சர் உறுதி செய்வதற்கு நன்றி: அதிமுக பதிலடி!
சென்னை: மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முந்தைய நாளே கடும் கண்டனங்களை தெரிவித்துவிட்ட நிலையில், எதிர்கட்சித் தலைவர் மணிப்பூர் குறித்து பேசவே இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருப்பது மிக மோசமான ஏமாற்று வேலை என அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி பழங்குடியினத்தவர் இடையே கடந்த மே மாதம் தொடங்கி வன்முறை நிகழ்ந்து வருகிறது. இதனால் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிகழ்ந்து வருகிறது. வன்முறையின் போது 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2 மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் தற்போது வெளியான வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், மணிப்பூரில் பெண்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் என் இதயமே நொறுங்கிவிட்டது. நம்முடைய மனசாட்சி எங்கே போனது? வெறுப்பும், விஷமத்தன்மையும் மனிதகுலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது. மணிப்பூரில் அமைதி திரும்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடியது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது மணிப்பூர் விவகாரம் பற்றி அதிமுக இதுவரை வாய் திறக்காதது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. மணிப்பூர் விவகாரத்தை கண்டிக்காமல் எதிர்க்கட்சி தலைவர் அமைதி காப்பது ஏன் என்று தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.
'இந்த விடியா முதல்வரின்' ஆட்சியில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை யாரும் பொய் பிரச்சாரம் செய்ய தயங்குவதில்லை ,மணிப்பூர் குறித்து எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் நேற்றே தனது கடும் கண்டனங்களை தெரிவித்துவிட்ட நிலையில், எதிர்கட்சித் தலைவர் மணிப்பூர் குறித்து பேசவே இல்லை என்று அமைச்சர்… pic.twitter.com/z8NMiv6QUL
— AIADMK (@AIADMKOfficial) July 22, 2023
இதுதொடர்பாக அதிமுக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்த விடியா முதல்வரின் ஆட்சியில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை யாரும் பொய் பிரச்சாரம் செய்ய தயங்குவதில்லை. மணிப்பூர் குறித்து எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் நேற்றே தனது கடும் கண்டனங்களை தெரிவித்துவிட்ட நிலையில், எதிர்கட்சித் தலைவர் மணிப்பூர் குறித்து பேசவே இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருப்பது மிக மோசமான ஏமாற்று வேலை! இந்த சமுகவலைதள யுகத்தில் கோமாளித்தனமானதும் கூட!
நடப்பது பொம்மை முதல்வரின் சர்க்கஸ் அரசு தான் என்பதை நித்தம் ஒரு அமைச்சர் உறுதி செய்வதற்கு நன்றி! அது சரி, மணிப்பூர் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினாரா என கேள்வி கேட்பவர்கள், மேகதாது அணை கட்ட ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையோ , தன் பக்கத்தில் உட்கார்ந்து மகிழ்ந்து குலாவிய டி.கே.சிவக்குமாருக்கு எதிராகவோ மு.க.ஸ்டாலின் இதுவரை வாய்திறக்காதது ஏன் என்று கேள்வி கேட்பார்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது அதிமுக.












Click it and Unblock the Notifications