எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம்.. அண்ணாமலை தவிர்த்து.. பாஜக தலைவர்களுக்கு சென்ற அழைப்பு!
சென்னை: சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 7ஆம் தேதி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் ரசிக்கப்படவில்லை என்று பார்க்கப்பட்டது. அதிமுகவிலேயே சிலர் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பாத நிலையில், கூட்டணி தொடர்பாக பேச கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

ஒட்டாத அதிமுக - பாஜக கூட்டணி
தொடர்ந்து முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்ததால், இந்த கூட்டணிக்கு இடையில் கூடுதல் சிக்கலாக மாறியது. அதேபோல் அமித்ஷா தொடர்ச்சியாக கூட்டணி ஆட்சி என்று பேசி வந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி என்று அறிவித்தார். இதனால் அதிமுக - பாஜக இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி இன்னும் முழுமையாக ஒட்டவில்லை என்று பார்க்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
இந்த நிலையில் ஜூலை 7 முதல் ஜூலை 21 வரை எடப்பாடி பழனிசாமி கோவை, கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 34 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடக்க விழா
இந்த சுற்றுப்பயணத்தின் முதல் நாளான ஜூலை 7ஆம் தேதி கோவை புறநகர் வடக்கு சட்டப்பேரவை தொகுதியில் தொடக்க விழா நடக்கவுள்ளது. இந்த தொடக்க விழாவில் அதிமுகவினர் மட்டுமல்லாமல பாஜகவினருக்கும் பங்கேற்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். கோவையில் பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளதால், எடப்பாடி பழனிசாமி இந்த முடிவு எடுத்திருக்கலாம்.
பாஜகவினருக்கு அழைப்பு
இதனால் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அண்ணாமலை வருகிறாரா?
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இடையில் மோதல் இருந்து வந்ததாக கூறப்பட்டது. அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாவதற்கு முன்பாக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டிருந்தார். இதனால் அண்ணாமலை இந்த தொடக்க விழாவில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications