2 கேம்ப்.. அதிமுகவில் என்ன நடக்குது? “பொறுத்திருந்து பாருங்க” என பதில் அளித்த சண்முகம்!
சென்னை: அதிமுகவில் பூகம்பம் வெடித்துக் கிடக்கிறது. எம்.எல்.ஏக்கள் இரு அணிகளாகப் பிரிந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் தலைமையில் புரட்சிப்படை உருவாகியுள்ள நிலையில் அதிமுக விவகாரம் குறித்த கேள்விக்கு "பொறுத்திருந்து பாருங்கள்" என்று பதில் அளித்துள்ளார் சி.வி.சண்முகம்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவுக்கு தோல்வியைச் சந்தித்துள்ளது. பல தொகுதிகளில் 3 ஆம் இடத்துக்கு சென்றது, பலர் டெபாசிட் இழந்துள்ளனர். வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தோல்விக்குப் பொறுப்பேற்று பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் தலைமையில் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் மற்றும் இதர எம்எல்ஏக்கள் கடந்த 3 நாட்களாக சென்னை எம்ஆர்சிநகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் 34 பேர் சி.வி.சண்முகம் தலைமையில் தவெகவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
முன்னதாக, நேற்று காலை எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், சி.வி.சண்முகத்தின் நடவடிக்கை தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், சி.வி.சண்முகத்துடன் சமாதானப் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவி சண்முகத்துடன் சிலர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதற்கெல்லாம் அவர் மசியவில்லை.
அதிமுக எம்எல்ஏக்கள் 34 பேரின் ஆதரவுக் கடிதமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்றில் 2 பங்கு, அதாவது 32 எம்எல்ஏக்களுக்கு மேல் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தால் கட்சித் தாவல் சட்டம் பாயாது என சட்ட ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. 34 பேரின் ஆதரவுக் கடிதத்துடன், முதல்வர் ஜோசப் விஜய்யை சந்திக்க சி.வி.சண்முகம் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்வதற்கான முயற்சியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று சட்டமன்றத்திற்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரு குழுக்களாகவே வந்தனர். அதிமுகவில் கருத்து வேறுபாடு நிலவுவதை அப்பட்டமாக இந்த நிகழ்வு வெளிக்காட்டியது. அதிமுக பிளவை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி எடுத்தபோது சிலர் மட்டுமே மேஜையை தட்டிய நிலையில், எஸ்.பி வேலுமணி உறுதிமொழி எடுத்தபோது பலர் மேஜையை தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 17 பேர், தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்தனர். அதிமுகவுக்கு 47 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் 17 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மனு அளித்துள்ளதால் மீதமுள்ள 30 பேர் சி.வி.சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்புக்கு ஆதரவாக உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள வீட்டில் சி.வி. சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தனியாக ஆலோசனை மேற்கொண்டனர். சட்டப்பேரவையில் இன்று காலை பதவியேற்காத நிலையில் மாலையில் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை அவரது அறையில் சந்தித்து மயிலம் தொகுதி எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொண்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
முன்னதாக, சி.வி. சண்முகத்திடம் "மோதல் எப்போது முடிவுக்கு வரும்?" என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்.எல்.ஏக்கள் மனு அளித்துள்ளது பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சி.வி.சண்முகம், "பொறுத்திருந்து பாருங்கள்" என்று பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications