திமுக தீர்மானம் இருக்கட்டும்... 2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி என்பதே மக்களின் தீர்மானம் - ஜெயக்குமார்
2021 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் தீர்மானம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம் என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் தீர்மானம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்னும் எட்டு மாதத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் அதற்கேற்ப தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுகவை ஆட்சிப்பீடத்தில் ஏற்றவும், முதல்வராக மு.க.ஸ்டாலினை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தவும் களப்பணியாற்றுவோம் என்று மிக முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை துறைமுகம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் திமுகவின் பொதுக்குழு பற்றியும் தீர்மானம் பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆளுங்கட்சி... திமுக தலைவர் ஸ்டாலினின் பல ஆண்டுகால கனவு எப்போது நனவாகும்
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் போதுமா? மக்கள் மனதில் என்ன தீர்மானம் இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று கூறினார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் தீர்மானம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொருவரையும் திருப்திபடுத்த ஒரு தீர்மானம் போடுவார்கள். அதே போல ஸ்டாலினை திருப்திபடுத்த கொடுத்த பில்டப்தான் முதல்வர் நாற்காலியில் அமரவைப்போம் என்பது. அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி பில்டப் கொடுத்திருக்கிறார்கள். அதிமுக மீண்டும் ஜெயிக்க வேண்டும் மக்களின் மனதில் உறுதியிட்ட தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் அதுதான் நடக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
எதிர்க்கட்சி என்பதற்காக நாங்கள் செய்யும் எல்லாவற்றையும் தவறு எனக் கூறக் கூடாது என்று கூறிய ஜெயக்குமார், அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டப்படி முடிவெடுக்கப்பட்டு விரைவில் நடைபெறும் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.