சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட சென்ற மக்கள்! ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிய சென்னை சாலைகள்!
சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தீபாவளி பண்டிகையை கொண்டாட கடந்த புதன்கிழமை முதல் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படையெடுக்கத் தொடங்கினர். ஒரு வழியாக நேற்றிரவோடு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் சென்றுவிட்டனர்.

இதனால் சென்னை மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, கத்திபாரா பாலம், பூந்தமல்லி சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆள் நடமாட்டத்தை இன்று காண முடியவில்லை. வழக்கமாக மேற்கூறிய இடங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆனால் இன்றைய தினம் பார்த்தால் கொரோனா கால ஊரடங்கை போல் சாலையே காத்து வாங்கிக் கொண்டிருந்தது.
பிற்பகல் வரை இந்த நிலவரம். ஒரு வேளை அதிகாலையில் எழுந்த அழுப்பில் அசைவ உணவு சாப்பிடுவிட்டு சற்று கண அயர்ந்துவிட்டு மாலை நேரங்களில் மக்கள் வெளியே வருகிறார்களோ என்னவோ தெரியவில்லை. இதனிடையே சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி, புனே, கொழும்பு செல்லவிருந்தவிமானங்கள் போதிய பயணிகள் இல்லாததன் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் மேலும் 6 உள்நாட்டு விமான சேவைகளும் சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்களை பொறுத்தவரை பகல் நேர ரயில்களான வைகை, பல்லவன், போன்ற ரயில்களில் பெரிதாக கூட்டம் இல்லை. இரவு நேர ரயில்களான பாண்டியன், ராக்ஃபோர்ட் போன்ற ரயில்களில் கூட்டம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே ஞயிற்றுக்கிழமை என்றால் சென்னை சாலைகள் பரபரப்பின்றி தான் காணப்படும். அதிலும் இன்று தீபாவளி என்பதால் ஆள் அரவமற்ற நிலையில் காத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.
நாளை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தாலும் பன்னாட்டு ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு நாளை வேலை நாள் என்பதால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களில் பெரும்பாலானோர் இன்றிரவே சென்னைக்கு பஸ் ஏறிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை சென்னையில் வழக்கம் போல் பரபரப்பு வந்துவிடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications