சென்னை சாலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! திணறிய வாகன ஓட்டிகள்.. அதிகாலையில் குளுகுளு கிளைமேட்
சென்னை: காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை உட்பட வடதமிழக மாவட்டங்களில் கணிசமாகவே மழை பெய்து வருகிறது.
அதிலும் குறிப்பாக இம்மாத தொடக்கத்தில் சென்னையில் அதி தீவிர கனமழை வெளுத்து வாங்கியது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். இப்போது தான் மழை சற்றே குறைந்து இருக்கிறது.

கடந்த வாரம் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கூட கரையைக் கடப்பதற்கு முன்னர், வலு இழந்தது. இதனால் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு மழை பெய்யவில்லை.
அதேநேரம் பனிப்பொழிவு இப்போது தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகர் சென்னையில் தீவிர பனிப்பொழிவு இருந்து வருகிறது. அப்படித்தான் நேற்றிரவு சென்னையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இன்று அதிகாலையும் பனிப்பொழிவு தொடர்ந்தது.
சென்னையின் நகர்ப்புறங்களில் மட்டுமின்றி சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. அதேபோல திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
பனிப்பொழிவு காரணமாக நடைப்பயிற்சி, சைக்கிலிங் மேற்கொள்பவர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், பனிப்பொழிவு காரணமாகக் குளிரும் அதிகமாக உள்ளது.
முக்கிய சாலைகளிலும் கூட பனி மூட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டிச் செல்வதில் கூட சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியே வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications