வேலை செய்யுறது ஐடி கம்பெனியில்! கடத்துனது 6 கிலோ கஞ்சா! சென்னை நங்கநல்லூர் இளைஞர் கைது
சென்னை: சென்னையில் ரூ 1.5 கோடி மதிப்பிலான 6 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததாக ஐடி ஊழியர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மடிப்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்தவர் தலைமை காவலர் பெரிய கருப்பசாமி. இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்துள்ள துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, பெரிய கருப்பசாமி நிற்பதை பார்த்துவிட்டு திரும்பிச் செல்ல முயன்றது. இதை தலைமை காவலர் பார்த்து விட்டார். உடனே ஆட்டோவின் அருகே சென்று அதனுள் இருந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் அவருடைய உடைமைகளை சோதனையும் செய்தார். அப்போது 6 கிலோ எடை கொண்ட உயர் ரக கஞ்சாவை அவர் வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ 1.5 கோடியாகும். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நங்கநல்லூரை சேர்ந்த சீனிவாச ராகுல் (29) என்பது தெரியவந்தது.
இவர் பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தின் ஊழியராக பணியாற்றி வருவது தெரிய வந்தது. இவர் பெங்களூரிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த 6 கிலோ கஞ்சாவை யாரிடம் கொடுக்க கொண்டு செல்கிறீர்கள் என கேட்டதற்கு அவர் தனக்கு தெரியாது என்றார்.
வாட்ஸ் ஆப் மூலம் மட்டுமே தொடர்பில் இருப்பதாகவும், கஞ்சாவை சேர்க்க சொல்லும் இடத்தில் சேர்த்துவிட்டு பணம் பெற்றுக் கொள்வதுதான் தனது வேலை என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை எம்ஜிஆர் நகர் அண்ணா மெயின் ரோடு அஜந்தா பேருந்து நிலையம் அருகே கடந்த மார்ச் மாதம் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரு இளைஞர்களை போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 25 போதை மாத்திரைகளும் 2 சிரிஞ்சுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பூக்கடை போலீஸார் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞரிடம் விசாரிக்க சென்றனர். அப்போது, அந்த இளைஞர் தனது பையை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார். அந்த பையை சோதனை செய்தபோது, அதில் 5.3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகம் இருந்து வருவது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது.












Click it and Unblock the Notifications