அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு - ஞானசேகரன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாதது என கூறி தள்ளுபடி செய்யக் கோரி மனு தாக்க செய்திருந்த நிலையில் அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சென்னை உயர்நீதிமன்றம் பதிவு செய்தது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால், வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தபட்டார். வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்த நிலையில் இன்று இரு தரப்பினரும் வாதங்களும் எடுத்து வைத்தனர். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேரி ஜெயந்தி ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து முகாந்திரங்களும் உள்ளதாகவும், இவர் தான் குற்றம் புரிந்து உள்ளார் என்பதற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளதால், அவரை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரம் இல்லை. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே வழக்கு உள்ளது. இவர் தான் செய்தார் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய ஞானசேகரன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
பின்னர் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி ராஜலட்சுமி வழக்கின் சாட்சி விசாரணை ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கும் என அறிவித்து விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications