30 ஆண்டுகள் ஆயுள்.. எதிர்பார்த்த தீர்ப்புதான்! மேல் முறையீடு செய்வோம்.. ஞானசேகரன் வழக்கறிஞர் பரபரப்பு
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பின்றி ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்நிலையில், இது எதிர்பார்த்த தீர்ப்பு தான் என்றும், மேல்முறையீடு செய்வோம் என்றும் ஞானசேகரன் தரப்பு வழக்கறிஞர் கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் அதற்கு அடுத்த நாளே ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஞானசேகரனுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகளின் சாட்சியங்களில் விசாரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த 5 மாதங்களில் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது. 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனையை குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். கூடுதலாக 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. 11 குற்றச்சாட்டுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு இரக்கமும் காட்டக் கூடாது என்றும், அதிகபட்சமான தண்டனை வழங்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஞானசேகரன் தரப்பு வழக்கறிஞர் கோதண்டராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையில் எந்தவிதமான கருணையும், சலுகையும் காட்டக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யப்படும். மேல்முறையீடு செய்வதற்கான உகந்த வழக்குதான் இது.
ஞானசேகரனிடம் கலந்தாலோசித்துவிட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஞானசேகரன் தற்போது தைரியமாகத்தான் இருக்கிறார். இது எதிர்பார்த்த தீர்ப்புதான். இந்த தண்டனையை நிறுத்திவைத்து பெயிலில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும். உடனடியாக மேல் முறையீடு நடவடிக்கைகள் செய்யப்படும். அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications