ஒருவர் செய்த தவறை வைத்து அமலாக்கத்துறை மீது பழிசுமத்தக் கூடாது! விட்டுக்கொடுக்காத அண்ணாமலை!
சென்னை: ஒருவர் செய்த தவறை வைத்து மொத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் பழிசுமத்தக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். இதனிடையே மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் அண்ணாமலை.

இது போன்ற நடவடிக்கை ராஜஸ்தானில் கடைசியாக நடைபெற்றது என்றும் இப்போது இங்கு நடைபெற்றுள்ளது எனவும் இது முதலும் முடிவும் அல்ல என்றும் அண்ணாமலை கூறினார். அமலாக்கத்துறையில் ஒருவர் செய்த தவறுக்காக அந்த துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுமே தவறானவர்கள் என்பது சரியானதல்ல எனத் தெரிவித்தார். அமலாக்கத்துறையை போலவே காவல்துறையில் ஒருவர் செய்த தவறுக்காக மொத்த காவல்துறை அதிகாரிகளையும் குற்றஞ்சொல்ல முடியுமா என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு அரசியல் முதிர்ச்சியே கிடையாது என்றும் அதனால் தான் அவர் இவ்வாறு பேசி வருகிறார் எனவும் சாடிய அண்ணாமலை, 5 மாநில சட்டமன்ற தேர்தலில், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது உறுதியாகியுள்ளதாக உற்சாகம் பொங்க கூறினார்.
அதேபோல் தெலுங்கானாவை பொறுத்தவரை கடந்த முறை ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வென்ற நிலையில் இந்த முறை இரட்டை இலக்கங்களில் பாஜக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர மாட்டார், தேர்தலில் போட்டியிட மாட்டார், என்று கூறிவிட்டு அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு அமைச்சர் பதவியையும் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறிய அண்ணாமலை இது திமுகவின் தனிப்பட்ட விருப்பம் அதனால் தலையிட விரும்பவில்லை என்றார்.
தென்மாவட்டங்கள் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லையில் படுகொலைகள் அதிகரித்துள்ளதாகவும் தமிழக, முழுவதுமே கொலை களமாக மாறி வருவதாகவும் கூறிய அவர், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு பற்றி விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications