“கூச்சமே இல்லையா? சொந்த மாவட்டத்துலயே இந்த நிலைமை” அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வறுத்தெடுத்த அண்ணாமலை!
சென்னை: "பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், சுவர் இல்லை, கூரை இல்லை,வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் கல்வி. இது தான் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் லட்சணம்." எனக் காட்டமாக விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
தமிழ்நாட்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு கொடுத்து விட்டதாக தமிழக அரசு விமர்சித்துள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தமிழக அரசை தாக்கியுள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், சுவர் இல்லை, கூரை இல்லை, போதிய ஆசிரியர்களும் இல்லை, வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் கல்வி. இது தான் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் லட்சணம்.
திருச்சி மாவட்டம், பச்சை மலையில் உள்ள ராமநாதபுரம் என்ற கிராமத்தில் உள்ளது இந்த பள்ளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப் போவதாகக் கூறி, பழைய கட்டிடத்தை இடித்துள்ளனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.
மகனின் ரசிகர் மன்றத் தலைவருக்கு பதவி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்திருந்தால், சினிமாத் துறை என்ற புதிய துறையை உருவாக்கி, திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை அமைச்சர் ஆக்கியிருக்க வேண்டியது தானே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே.
என் ஏரியா, உன் ஏரியா என்று திரைப்பட பாணியில் வசனங்கள் பேசுவது ஒன்றே அமைச்சரின் தகுதி என்று நினைத்துக் கொண்டிருப்பவருக்குப் பொருத்தமாக இருந்திருக்கும். பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி 44,042 கோடி ரூபாய். எங்கே செல்கிறது இந்த நிதி?
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தல் உட்பட பல்வேறு பணிகளுக்காக 2021 தொடங்கி 2024 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட சமக்ர சிக்ஷா திட்ட நிதி ரூ.5,583 கோடி எங்கே போனது? வாங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று பொய் சொல்லக் கூச்சமாக இல்லையா?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, மொம்மொழி கொள்கையை நிராகரித்ததற்காக தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பறிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார். தமிழ்நாட்டிற்கான நிதியை பறித்து மாணவர்களை மத்திய அரசு தண்டித்துள்ளதாக கூறியுள்ள அவர், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியை பறித்து மற்ற மாநிலங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
எஸ்.எஸ்.ஏ கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தனது பங்களிப்பாக கடந்த நிதியாண்டில் ரூ.2,121 கோடி நிதி அளித்தது. தற்போது 2024-25ஆம் ஆண்டுக்கான பங்களிப்பாக ரூ.2,152 கோடி நிதியை ஒதுக்கி இருந்தது. ஆனால் மத்திய அரசின் நிபந்தனையை தமிழக அரசு ஏற்காததால், தமிழ்நாடு கல்விக்கான நிதியை குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications