முக்குலத்தோர் + இஸ்லாமியர் எதிர்ப்பு.. இருந்தும் எடப்பாடி பக்கம் அன்வர் ராஜா ஜம்ப்! இதுதான் காரணம்
சென்னை: பிரச்சாரம் வேண்டாம், மீட்டிங் வேண்டாம், எங்க தலைவன் முகம் தான் எங்க பிராண்ட் என்று சினிமா படத்தில் நடிகர் ராதா ரவி பேசிய வசனத்திற்கேற்ப எம்.ஜி.ஆரும், இரட்டை இலையும், தான் அதிமுகவின் பிராண்ட் என்பதை இன்று நிரூபித்துள்ளார் அன்வர் ராஜா.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்து அரசியல் களத்தில் கவனம் ஈர்த்திருக்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா.

இதன் மூலம் கட்சியை யார் வழிநடத்துவது என்பது முக்கியமில்லை, இரட்டை இலைச் சின்னம் யாரிடம் இருக்கிறதோ அது தான் அதிமுக என்பதை உணர்த்தியுள்ளார் அன்வர் ராஜா.
இத்தனைக்கும் அன்வர் ராஜாவின் சொந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் முக்குலத்தோர் அதிகம். அதனால் அவர் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து உள்ளூரில் அரசியல் செய்வார் என எதிர்பர்க்கப்பட்ட நிலையில் கட்சியின் சின்னம் எங்கே யார் வசம் உள்ளதோ அங்கே அடைக்கலம் புகுந்துவிட்டார்.

1986-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் பேச வாய்ப்பளிக்கப்பட்ட 4 நபர்களில் அன்வர் ராஜாவும் ஒருவர் என்பது திரும்பிப் பார்க்கத்தக்கது. அந்த மாநாடு முடிந்த ஒரே வாரத்தில், அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக அன்வர் ராஜாவை நியமித்து எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி கொடுத்ததும் கடந்த கால வரலாறு.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் அதிமுக ஆட்சி மன்றக் குழுவில் எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்ட 15 பேரில் 13 பேர் அமைச்சர்கள், ஒருவர் எம்.பி., அன்வர் ராஜா மட்டும் தான் ஒன்றியத் தலைவர். சாதாரண ஒன்றியத் தலைவரான தன்னை அதிமுக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமித்த எம்.ஜி.ஆர் இன்று உயிரோடு இல்லாவிட்டாலும், அவர் ஆரம்பித்த அதிமுக உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எடப்பாடியுடனான பழைய கசப்புகளை மறந்து அவருடன் கரம் கோர்த்துள்ளார் அன்வர் ராஜா.












Click it and Unblock the Notifications