சென்னையில் வீடு வாங்க போறீங்களா? வெளிநாட்டில் சம்பாதித்ததை ஏமாந்த தம்பதி.. ஹைகோர்ட் வரை போராட்டம்
சென்னை: சென்னையில் வீடு விற்பதாக கூறி நான்கரை கோடி ரூபாய் அளவிற்கு பணமோசடி செய்த விவகாரத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த அரவிந்த் என்பவர் பெர்முடா நாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், சென்னையில் வீடு வாங்க திட்டமிட்டார். அவரது மனைவி யோகலட்சுமி சென்னையில் வீடு தேடியபோது, கோல்டன் ஹோம்ஸ் என்ற நிறுவனத்தின் மேலாளர் மணிகண்டன் என்பவர் சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள வீட்டை காட்டியுள்ளார்.

5 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த வீட்டை வாங்குவதற்காக ஒப்பந்தம் பேசப்பட்டு பல்வேறு தவணைகளில் வீட்டின் உரிமையாளர்களான மதுரிமா பால்சிங், கணவர் ராஜ்குமார் பால் சிங் மற்றும் மேலாளர்கள் மணிகண்டன், ஹரிராம், ஆகியோரிடம் நான்கரை கோடி ரூபாய் அளவிற்கு பணம் கொடுத்துள்ளார். அதன் பின்னரும் பத்திர பதிவு செய்து கொடுக்காததால், தொடர்போராட்டத்தின் காரணமாக வெற்று காகிதங்களில் மிரட்டி கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டை பதிவு செய்ய அந்நிறுவனம் ஒப்புக்கொண்டிருக்கித.
ஆனால் தங்களுக்கு விற்பதாக கூறப்பட்ட வீட்டில் ஜெயசிங் என்பவர் குடியிருப்பதைக் கண்டு மேலாளர்கள் மணிகண்டன் மற்றும் ஹரிராம் ஆகியோரை தொடர்பு கொண்ட நிலையில் அவர்கள் முறையாக பதில் அளிக்காததால் நான்கரை கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்ததாக சென்னை காவல் துறையில் யோகலட்சுமி கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உரிய வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று பிப்ரவரி மாத இறுதியில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என காவல்துறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் யோகலட்சுமி வழக்கு தொடர்ந்தார். எழும்பூர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யவும் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த பொழுது அரசு தரப்பில் பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக மதுரிமா பால்சிங், ராஜ்குமார் பால் சிங், மணிகண்டன், ஹரிராம், ஜெய் சிங் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், மிரட்டல், கூட்டுச்சதி ஆகிய நான்கு பிரிவுகளில் மார்ச் 25ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications