ஜெயலலிதா இறந்தது எப்போது? அம்பலப்படுத்திய பஞ்சாங்கம்! திதியால் தெரிந்த சதி! பரபரப்பு அறிக்கை
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணித்தது எப்போது என்பது அவரது அண்ணன் மகன் தீபக் முதல் ஆண்டு கொடுத்த திதியால் அம்பலமானது என பஞ்சாங்கத்தை மேற்கோள் காட்டி ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் அதே ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பியதாலும் அதிமுகவின் இரு அணிகளும் இணைய ஜெயலலிதா மரணம் குறித்து உண்மைகள் வெளியே வர ஒரு கமிஷன் வைக்க வேண்டும் என கோரியதாலும் கடந்த அதிமுக ஆட்சியில் ஆறுமுகசாமி ஆணையத்தை முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள்
இந்த ஆணையம் 2017 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள் என பல்வேறு தரப்பை சேர்ந்த 158 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்தது. அது போல் ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரையும் அழைத்து விசாரணை நடத்தியது. பல முறை ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கால அவகாசம் வழங்கிய நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தாக்கல் செய்திருந்தார்.

தமிழக அமைச்சரவை
இது தொடர்பான அறிக்கை தமிழக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு சட்டசபையிலும் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்றைய தினம் தமிழக சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அவருக்கு ஆஞ்சியோ செய்யவிடாமல் தடுத்தவர் சசிகலா என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணம்
மேலும் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் குற்றம் செய்தவர்கள் என்றும் ஆறுமுகசாாமி ஆணையம் பகிரங்கமாக தெரிவித்துள்ளது. ஓபிஎஸ்ஸிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்திய போது ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்கு தொடர்பில்லை என கூறியிருந்த நிலையில் தற்போது பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதா இறந்த தேதி
இந்த நிலையில் ஜெயலலிதா இறந்த தேதியில் கூட முரண்பாடு இருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது ஜெயலலிதா காலமானது 2016 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11 மணிக்கு என சொல்லப்பட்டது. ஆனால் ஜெயலலிதா 2016 டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கே காலமானதாக ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அந்த நேரத்தை கருத்தில் கொண்டே ஜெயலலிதாவுக்கு அவரது அண்ணன் மகன் ஜெ தீபக் முதலாமாண்டு திதி கொடுத்தார் என பஞ்சாங்க ஆவணத்தை மேற்கோள் காட்டியுள்ளது. ஆணையம்.












Click it and Unblock the Notifications