ஜூன் 11 வரை சிறை.. தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றாரா தடகள பயிற்சியாளர் நாகராஜன்?
சென்னை: வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தடகள பயிற்சியாளர் நாகராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை ஜூன் 11 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்தார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் பாலியல் தொல்லைக்குள்ளான மாணவிகள் ஒவ்வொருவராக துணிந்து புகார் கூறி வருகிறார்கள்.

பிரைம் ஸ்போர்ட்
அந்த வகையில் சென்னை பாரிமுனையில் பிரைம் ஸ்போர்ட் அகாதெமி என்ற தடகள பயிற்சி நிறுவனத்தை நடத்தி வந்த தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல் துறைக்கும் அந்த பெண் புகார் அனுப்பியதால் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தார்கள்.

பயிற்சியாளர்
விசாரணைக்கு பிறகு தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடகள பயிற்சி பெற்று வந்த 19 வயது பெண்ணுக்கு அவரது பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

கொலை மிரட்டல்
இந்த பாலியல் தொல்லைகளை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் டபிள்யூ 10 பூக்கடை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

விசாரணை
இதுகுறித்து நந்தனத்தை சேர்ந்த நாகராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போக்சோ நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை ஜூன் 11 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று இரவு நாகராஜன் வீட்டிற்கு மகளிர் போலீஸார் சென்ற போது அவர் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications