ஜனநாயகன் ‘லீக்’ விவகாரம்: எடிட்டர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. கைதான 9 பேருக்கும் ஜாமீன் மறுப்பு!
சென்னை: ஜனநாயகன் படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் கசிய விட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல, முன் ஜாமீன் கோரிய எடிட்டர் உமா சங்கரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் ரிலீஸாக இருந்த படம் ஜனநாயகன். நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்று கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் மறு ஆய்வுக்காக தணிக்கை வாரியத்திடம் நிலுவையில் உள்ளது.

இந்த படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக்குழு முன் இருக்கும் நிலையில் ஏப்ரல் 3 ஆம் தேதி சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து படத்தயாரிப்பு நிறுவனம், புகார் அளித்த நிலையில் 21 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சென்னை சைபர் கிரைம் போலீசார் சிலரை கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட திருவேற்காட்டைச் சேர்ந்த உமாசங்கர் என்பவர், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. உமாசங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ், மனுதாரர் ஜவுளிக்கடை நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார்.
படத்தயாரிப்புக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் மற்றும் சைபர் கிரைம் போலீசார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆகியோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்கள் வாதிடுகையில், "மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டதில் உமா சங்கருக்குத்தான் முக்கிய பங்கு உள்ளது.
உதவி எடிட்டராக பணியாற்றிய நபரும், அவரது சகோதரரும் ஜனநாயகன் படத்தை திருடி வந்து மனுதாரரிடம் அளித்துள்ளனர். அவர்தான் அதை இணையத்தில் பதிவேற்றம் செய்து பகிர்ந்துள்ளார். இதற்கு பின்னணியில் வேறு யார் யார் உள்ளனர் என்பதை, உமாசங்கரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும். எனவே முன்ஜாமீன் அளிக்கக்கூடாது" என வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது எனக்கூறி, முன்ஜாமீன் கோரிய உமாசங்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, இந்த வழக்கில் ஸ்ரீநாத், பாலகிருஷ்ணன், ருத்ரன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஜாமின் அளிக்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக இந்த மனு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில், இந்த வழக்கிற்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை, ஜாமின் அளிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. போலீசார் தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வக்கீல் தேவராஜன், பலகோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் இணையத்தில் வெளியிடப்பட்டதால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புலன் விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் கூறுகையில், சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட்டதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜாமீன் தரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எஸ். கார்த்திகேயன், குற்றச்சாட்டுகளின் தீவிரம், அவற்றின் தன்மை, புலன் விசாரணையின் தற்போதைய நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications