சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பெரிய மாற்றம்.. இனி அந்த பக்கம் போகாதீங்க
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணி காரணமாக புறநகர் மின்சார ரயில் டிக்கெட் மையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. உலகத்தரத்திற்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைக்கும் பணியினை ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்..
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு மக்கள் செல்வதற்கு முக்கியமான ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது. இதேபோல் வடமாநிலங்களுக்கு செல்லவும் தற்போது எழும்பூர் ரயில் நிலையம் அதிகம் பயன்பட தொடங்கி உள்ளது. சென்னை எழும்பூர் முதல் கடற்கரை வரை நான்காம் ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கூடுதலாக பல்வேறு ரயில்களை வடமாநிலங்கள் மற்றும் தென்மாவட்டங்களுக்கு இயக்க முடியும்.

இது ஒருபுறம் எனில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சுமார் ரூ.735 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், முதல் கட்டமாக எழும்பூர் ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அடுத்ததாக புறநகர் மின்சார ரயில் நிலையத்திற்கான நடைமேடை 10 மற்றும் 11 ஆகியவற்றிற்கு அருகில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையம், மற்றும் புறநகர் மின்சார ரயில் டிக்கெட் கவுண்ட்டர் உள்ள கட்டிடம் இடிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தின் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த முன்பதிவு மையம், பார்சல் அலுவலகம் மற்றும் புறநகர் மின்சார ரயில் டிக்கெட் கவுண்ட்டர் ஆகியவற்றை தற்காலிகமாக இடமாற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை 2 வாரத்தில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள்.
இதேபோல, எழும்பூர் ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் பூந்தமல்லி சாலை அருகில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் அருகில் புறநகர் மின்சார ரயில் டிக்கெட் மையமும், பார்சல் மற்றும் முன்பதிவு மையமும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அதிகாரிகள் கூறும் போது, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத் தரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.. இதற்கு தமிழக அரசும் முழு ஆதரவை அளித்து வருகிறதுது.. புதிய கட்டிடம் பணிகள் முடியும் வரையில் புறநகர் மின்சார ரெயில் மற்றும் முன்பதிவு மையங்களில் டிக்கெட் கவுண்ட்டர் தற்காலிகமாக புதிய இடத்தில் செயல்பட இருக்கிறது. தற்போது எழும்பூரில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையம் மற்றும் புறநகர் மின்சார ரெயில் டிக்கெட் கவுண்ட்டர் ஆகியவை இடிக்கப்பட உள்ளது. இந்த நுழைவுவாயிலை இடிக்காமல் சீரமைப்பு பணி மட்டுமே நடைபெறும். இதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்" என்றார்கள்.












Click it and Unblock the Notifications