விஜய்க்கு காத்திருக்கும் சவால்! தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி?
சென்னை: தவெக தலைவர் விஜய்யை தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க ஆளுநர் அர்லேகர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும் வரும் 13 ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி? என்பது குறித்து இங்கு காணலாம்.
தவெக தலைவர் விஜய் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 34.92 சதவீத வாக்குகளை அள்ளியது. திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை வீழ்த்திய விஜய் நேற்று பெரும்பான்மையை காட்டிய நிலையில் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழகத்தில் விஜய் முதல்வராக பதவியேற்கிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
விஜய் இன்று முதல்வராக பதவியேற்கும் நிலையில் தவெகவினர் உற்சாகமடைந்துள்ளனர். ஆளுநர் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். மேலும் வரும் 13 ஆம் தேதிக்குள், தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிடுள்ளார்.
பதவி ஏற்று விட்டோம் இனி ஆட்சி அமைக்கலாம் என இருந்துவிட முடியாது. 2 முக்கிய கட்டங்களை கடந்த பிறகே ஆட்சியை தொடங்க முடியும். அதாவது முதலில் தவெக அரசு 13-ந் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதால் உடனடியாக சபா நாயகர், துணை சபாநாயகர் தேர்தலை நடத்த வேண்டும். சபாநாயகர் ஒருவரை அரசு முன்மொழிந்த பிறகு, அவருக்கு எதிராக வேறொரு வேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்தினால், போட்டி நிலவும்.
சபாநாயகர் அறிவிப்பு
அப்போது எண்ணிக் கணிக்கும் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர் சபாநாயகராக அறிவிக்கப்படுவார். போட்டியில்லாவிட்டால், அரசால் அறிவிக்கப்பட்ட சபாநாயகரின் இரு கைகளையும் முதல்வர் விஜய்யும், எதிர்க்கட்சித் தலைவரும் பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பர்.
இதன் பின்ன அன்றைய தினமோ அல்லது மற்றொரு நாளோ அதாவது 13-ந் தேதிக்குள் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படும். இந்த தீர்மானத்தை ஆளும் கட்சியில் இருந்து ஒருவர் முன் மொழிய, அதன் மீது முதல்வர் விஜய் உரையாற்றி அனைவரது நம்பிக்கையையும் கோருவார். அதில் எதிர்க்கட்சியினரும் உரையாற்றுவார்கள்.
தொடர்ந்து அந்த தீர்மானம் எம்எல்ஏக்களின் வாக்கெடுப்புக்கு விடப்படும். எதிர்க்கட்சியினர், எண்ணிக் கணிக்கும் டிவிஷன் முறைப்படி வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று கேட்டால், அந்த வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட வேண்டும். அவைக்கு வெளியே எம்எல்ஏக்கள் சென்றிருந்தால் அவர்களை அவைக்குள் வரச் செய்வதற்கான மணியோசை 3 முறை ஒலிக்கப்படும்.
இருக்கை எண்
இதன் பின்னர் அவையின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும். பின்னர் சட்டசபை செயலாளர், டிவிஷன் வாக்கெடுப்பை நடத்துவார். ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள (மொத்தம் 6 டிவிஷன்) எம்எல்ஏக்களிடம் சட்டசபை செய லாளர், தீர்மானத்தை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் தனித்தனியாக எழுந்து நிற்கக் கூறுவார். (முதல்வர் முதல் டிவிஷனில் இருப்பார். அவருக்கு நேர் எதிரேயுள்ள 6-ம் டிவிஷனில் எதிர்க்கட்சித் தலைவர் இருப்பார்).
அந்த வகையில், அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கையையும், எதிர்ப்போரின் எண்ணிக்கையும் கணக்கிட்டு சபாநாயகரிடம் செயலாளர் வழங்குவார். அதன்படி வெற்றி, தோல்வியை சபாநாயகர் அறிவிப்பார். வெற்றி பெற்றுவிட்டால் அரசு தனது பணியை தொடர்ந்து நடத்தும்.
ஒருவேளை தீர்மானம் தோற்றுவிட்டால், அது கவர்னருக்கு தெரிவிக்கப்படும். பெரும்பான்மையை அரசு நிரூபிக்கத் தவறிவிட்டதால் அரசு கலைக்கப்படுவதாக கவர்னர் உத்தரவிடுவார். அரசுக்கு தேவையான பெரும்பான்மை ஒன்றிரண்டு ஓட்டுகளில் ஒட்டிக் கொண்டிருப்பதால் ஆளும் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அன்று தவறாமல் வாக்கெடுப்புக்காக அவைக்கு வருவது மிகமிக அவசியமாகும்.














Click it and Unblock the Notifications