இயற்பியல் கஷ்டம்.. மாணவர்களுக்கு கைக்கொடுத்த உயிரியல் - வேதியியல்! நீட் தேர்வு எப்படி இருந்தது?
சென்னை: நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்தது. இதில் பயாலஜி கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், கெமிஸ்ட்ரி கேள்விகள் யோசித்து பதிலளிக்கும் வகையிலும், இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் மாணவ-மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டில் பொது மருத்துவம், பல்மருத்துவம் பயில நீட் (NEET) தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது.

இந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டுகள் உள்ளன.
இதற்கிடையே தான் கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு எழுதும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது மாணவர்களுக்கு பலனளித்து வருகிறது. அதேவேளையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் தான் நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெற்றது. மொத்தம் 557 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இன்று மதியம் பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கியது. கடும் சோதனைகளுக்கு பிறகு மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தேர்வு மாலை 5:20 மணிக்கு முடிவடைந்தது. தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த நீட் தேர்வு மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது. அதன்பிறகு மாணவ-மாணவிகள் தேர்வு அறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது அவர்களிடம் நீட் தேர்வு கேள்விகள் எப்படி இருந்தது? என்ற கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு மாணவ-மாணவிகள், ‛‛நீட் தேர்வில் உயிரியல், தாவரவியல் பாடங்கள் சார்ந்த கேள்விகள் எளிமையான இருந்தன. வேதியியல் பாடம் சார்ந்த கேள்விகள் யோசித்து பதிலளிக்கும் வகையில் இருந்தன. அதேவேளையில் இயற்பியல் பாடம் தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்தன. இந்த கேள்விகளுக்கு அதிக நேரரம் யோசித்து பதிலளிக்க வேண்டி இருந்தது. ஆனாலும் நன்றாக எழுதியுள்ளோம்'' என்றனர்.












Click it and Unblock the Notifications