பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள்தான்.. நிரபராதிகள் மாதிரி ஸ்டாலின் கொண்டாடுகிறார்: அண்ணாமலை
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் என்பதை நாம் மறுக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கு 6.5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் பேரறிவாளனை 142 சட்டவிதிபடி விடுதலை செய்வதாக உச்சநீதமன்றம் தீர்ப்பளித்தது.
எனக்கு நீதி இல்லையா! நாங்கள் மனிதர் இல்லையா? ராஜீவ் குண்டுவெடிப்பில் காயமடைந்த பெண் அதிகாரி ஆவேசம்.!
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
இந்த தீர்ப்பை தமிழகத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிலையில் நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளன், அவரது குடும்பத்தினர் சந்தித்தனர். அப்போது பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் ஆரத்தழுவினார். அது போல் பேரறிவாளன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்தார்.
பாஜக வரவேற்கிறது
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் என்பதை மறுக்க முடியாது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிரபராதி என எங்கும் கூறவில்லை. நிரபராதிகளை விடுதலை செய்தது போல் முதல்வர் ஸ்டாலின் கொண்டாடி வருகிறார்.
நுணுக்கமான தீர்ப்பு
உச்சநீதிமன்றம் மிக மிக நுணுக்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பாஜக ஏற்கிறது. சரித்திரத்தை மறக்கக் கூடாது, நம் மண்ணில் நடந்ததையும் நாம் மறக்க கூடாது. அமைச்சரவை எடுத்த முடிவை அப்படியே ஆளுநர் ஏற்க வேண்டும் என அவசியமில்லை.
இரட்டை வேடம்
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகியிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி இன்றைய தினம் அறவழி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.